Tamil Nadu: அனைவருக்கும் இ பாஸ்...ஆன்லைனில் பதிவிறக்கம்...புதிய முறை அறிமுகம்!!
சென்னை: தமிழகத்தில் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இ பாசை உடனடியாக ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாவட்டங்களுக்குள் செல்ல இ பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இ பாஸ் பெற்றவர்கள் மட்டும்தான் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியும். அந்த வகையில் நெருங்கிய உறவினர்களின் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

பல மாவட்டங்களில் இ பாஸ் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த மோசடியில் சிலர் கைதும் செய்யப்பட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு போலி இ பாஸ் வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். மத்திய அரசே ரத்து செய்து இருக்கும்போது ஏன் மாநில அரசு இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து இ பாஸ் நடைமுறையில் இருந்தாலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. செல்போன் எண், குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை சாட்சியமாக வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இத்துடன் சேர்ந்து ஆட்டோ ஜெனரேட் என்ற முறையில் இந்த இ பாஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஆன் லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications