ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? நாளை முதல் வருது கட்டுப்பாடு! ‘இதை’ மறந்தால் உள்ளே நுழைய முடியாது!
சென்னை: கோடை காலங்களில் தமிழகத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ்ஸை நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. இந்த நிலையில் நாளை முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படி கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விபரங்களான பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கம் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோடை கொடைக்கானல், நீலகிரியை சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலா பயணிகள் முறையான இ-பாஸுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அதாவது கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் ஊட்டி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என கடந்த 13ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக ஊட்டி கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம்.
அதே நேரத்தில் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது நீலகிரி மாவட்டத்தில் கொட்டைநாடு, காணி, பள்ளியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, தேவாலா ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனை சாவடியில் சோதனை நடத்தப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொடைக்கானலில் பிற பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications