எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக
சேலம்: தமிழக தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அதிரடி காட்டிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே அதிர்ச்சி காத்திருந்தது. அக்கட்சி சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவிருந்த வேட்பாளர் திடீரென மாயமாகி, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் கட்சித் தலைமையை டென்ஷனாக்கி உள்ளது. இதையடுத்து 233 வேட்பாளர்களையும் கண்காணிக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இரு வாரங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. முதல்முறையாகச் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் தவெக வலுவான கூட்டணியை அமைக்க முயன்றது. இருப்பினும், யாரும் அவர்களை நம்பி வராததால் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. அதன்படி 234 தொகுதிகளுக்கும் விஜய் அதிரடியாக வேட்பாளர்களை அறிவித்தார்.

ட்விஸ்ட்
அதில் எடப்பாடி தொகுதியில் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடந்தது. எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் களமிறக்கப்பட்டவர் அருண் குமார். வேட்புமனு பரிசீலனையின்போது அவரது விண்ணப்பம் சர்ச்சையானது. அவரது மனு முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லையாம். சில இடங்களில் கையெழுத்து விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதோ வந்து கையெழுத்துப் போடுகிறேன் எனச் சொன்னவர்.. அதன் பிறகு தொடர்பு எல்லைக்குச் சென்றுவிட்டாராம்.
சரி, மாற்று வேட்பாளரும் அருண் குமாரின் மனைவியுமான நித்யா விண்ணப்பம் கை கொடுக்கும் எனப் பார்த்தால், அவரோ 10 பரிந்துரைகளுக்குப் பதிலாக 7 பேரை வேட்புமனுவில் காட்டியிருந்தார். இதன் காரணமாக எடப்பாடி தொகுதியில் தவெக வாக்குப்பதிவுக்கு முன்பே அவுட். 234ல் வெல்வோம் என்று முழங்கிய விஜய்க்கு, வேட்புமனு பரிசீலனை முன்பே அது 233ஆகக் குறைந்தது. இது தவெக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொந்தளித்த ஆதவ்
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் ஒரு கருப்பு ஆடு. எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக்கொண்டு, அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டார். ஜனநாயகமற்ற முறையில் வேட்பாளரைக் காசு கொடுத்துத் தூக்குவது தவறான அரசியல். இதற்கு தவெக தக்க பதிலடி கொடுக்கும்" எனக் கூறியிருந்தார். வழக்கமாக திமுகவை மட்டுமே குற்றஞ்சாட்டும் தவெக, இந்த முறை அதிமுக மீது பாய்ந்துள்ளது.
விஜய் டென்ஷன்
அதேநேரம் எடப்பாடியில் நடந்த இந்த நம்பிக்கை துரோகம் மற்ற தொகுதிகளிலும் நடந்துவிடக் கூடாது என்பதில் விஜய் தரப்பு மிகத் தீவிரமாக உள்ளதாம். இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தவெக வேட்பாளர்கள், மற்ற கட்சியினரிடம் சிக்காமல் இருக்கத் தலைமை கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் சோர்வடையாமல் இருக்க அவ்வப்போது விஜய் உடன் நேரடியாகப் பேச வைக்கவும் கூட திட்டமிட்டுள்ளனராம்.
களமிறங்கிய டீம்
ஏற்கனவே சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் உள்ள சில தவெக வேட்பாளர்களை இதர கட்சி நிர்வாகிகள் ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகத் தலைமைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாம். இதனால் 233 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துவதோடு, அவர்களைக் கண்காணிக்கவும் ஒரு ரகசிய டீமை தவெக இறக்கியுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடியில் கோட்டை விட்டதை மற்ற தொகுதிகளில் வேட்டையாடித் தீர்ப்போம் என்ற ரேஞ்சில் தவெக இதில் தீவிரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications