மின்சார வாரியம் சர்ப்ரைஸ் தருதா? தவிக்கும் மாற்றுத்திறனாளி மின்ஊழியர்கள்.. சலுகை வழங்குமா தமிழக அரசு
சென்னை: பல்வேறு அதிரடிகளை செய்துவரும் தமிழக மின்சார வாரியம், மாற்றுத்திறனாளி ஊழியர்களின் கோரிக்கையையும் பரிசீலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
40 சதவீதம் உடல் குறைபாடு இருந்தால், அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்கிறார்கள். இதன்காரணமாக அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் பஸ், ரயில்களில் வழங்கப்படுகின்றன. இவர்களுக்காகவே, தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.
மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியாலும், கடின உழைப்புகளாலும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.. அவர்களை இன்னும் ஊக்கப்படுத்துவதற்காக, நிதியுதவி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது.

தமிழகம்: அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. ஒரு சில துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்யப்படுகிறது.
இதில், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அவ்வப்போது அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்படுகிறது.
அந்தவகையில், இப்போதும் அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், 1,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.. அவர்களுக்கான நலச்சங்க துவக்க விழா, சென்னை, எழும்பூரில் நேற்று நடந்தது. அதில் சங்க தலைவர் கோட்டீஸ்வரன், பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள்: இதுகுறித்து, ஊழியர்கள் சொல்லும்போது, மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது, அவர்களின் வீட்டிற்கு பக்கத்திலேயே செயல்பட்டு வரும் அலுவலகத்தில் பணிபுரிய, முன்னுரிமை அளிக்க வேண்டும். இடமாறுதலின்போது, விரும்பிய இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்... தமிழக அரசு, மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும், மின் வாரியமும் வழங்க வேண்டும்.
கோரிக்கை: சில ஊழியர்கள், உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு தவழ்ந்தும், நடக்க மிகவும் சிரமப்பட்டும் வருகிறார்கள். அதனால், வாரிய அலுவலகங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கோரிக்கைகளை தமிழக மின்சார துறையும் விரைவில் பரிசீலிக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications