தமிழகத்தில் இந்த 7 சீட்டில் ரிசல்ட் எப்படி வேணாலும் மாறும்! திமுக + அதிமுக + பாஜக அணியில் திக்திக்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 7 இடங்களில் ரிசல்ட் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஏனென்றால் இந்த 7 தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் பாஜக இடையே கடும் போட்டி உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் ஜுன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்துக்கு தேர்தல் முடிந்த நிலையில் பிற மாநிலங்களுக்கு தேர்தல் நடந்து வந்தன.

அதன்படி இன்றோடு நாடு முழுவதும் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இந்நிலையில் தான் இன்று மாலை 6.30 மணிக்கு பிறகு செய்தி நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் இந்த கருத்து கணிப்பின் முடிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவும் - பாஜகவும் சமம்.. தமிழகத்தில் 3 இடங்களில் மலரும் தாமரை! திமுகவுக்கு 34 சீட் - டைம்ஸ் நவ்
அதோடு தமிழகத்தில் 7 தொகுதிகளில் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி உள்ளதாகவும், இந்த தொகுதிகளின் ரிசல்ட் கடைசி நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 தொகுதிகளில் 5 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கும் ரிசல்ட் சாதகமாக வரலாம் என கூறப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தான் கடும் போட்டி உள்ளது. இதில் வேலூர் தொகுதியில் திமுக சிட்டிங் எம்பியான அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம் இடையே கடும் போட்டி உள்ளது. அதேபோல் தருமபுரி தொகுதியில் திமுக வே்ட்பாளர் மணி மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி இடையே கடும் போட்டி உள்ளது.
ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளரான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சிட்டிங் எம்பி நவாஸ் கனி மற்றும் பாஜக கூட்டணியின் சுயேச்சை வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி உள்ளது. அதேபோல் திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் ராபர்ட் புரூஸ் இடையே கடும் போட்டி உள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் திமுகவின் மலையரசன் மற்றும் அதிமுகவின் குமரகுரு இடையே கடும் போட்டி உள்ளது. கோவையை பொறுத்தமட்டில் திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என 3 பேரின் இடையே கடும் போட்டி உள்ளது.
புதுச்சேரியை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி வேட்பாளரான சிட்டிங் எம்பி வைத்திலிங்கம் மற்றும் பாஜகவின் நமச்சிவாயம் இடையே கடும் போட்டி உள்ளது. இந்த 7 தொகுதிகளில் ரிசல்ட் மாறுவதை பொறுத்தே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுகவுக்கு 33யை தாண்டி கூடுதல் இடம் கிடைக்கிறதா? என்பதும், அதிமுக மற்றும் பாஜகவுக்கு கிடைக்கும் இடங்களின் விபரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications