ஓசூர் ஏர்போர்ட் எங்கு அமையவுள்ளது? லிஸ்டில் உள்ள 5 இடங்கள்.. ஆஹா பெங்களூருக்கு செம போட்டி தான்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏழு விமான நிலையங்கள் இப்போது இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக மிக முக்கிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடியில் விமான நிலையங்களும் உள்ளன. அடுத்தகட்டமாக இப்போது ஓசூரில் மற்றொரு விமான நிலையத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

ஓசூர் ஏர்போர்ட்: இது குறித்துக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. பெங்களூருக்கு மிக அருகே இந்த விமான நிலையம் இருக்கும். கர்நாடகாவில் விமான போக்குவரத்து அதிகரிக்கும் நிலையில், இதனால் ஓசூரும் நிச்சயம் பயனடையும். இதற்கிடையே ஓசூருக்குப் போட்டியாக ஜிகானி என்ற பெங்களூரின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கக் கர்நாடக அரசு முயன்றது. இருப்பினும், அங்குத் தேவையான இடம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே ஓசூர் விமான நிலைய பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க 5 இடங்களை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையம் பெங்களூரில் இருந்து வெறும் 40 கிமீ தொலைவில் அமையவுள்ளது. இதனால் பெங்களூர் செல்லும் பயணிகளும் கூட இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தலாம்.
5 இடங்கள்: இதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் ஐந்து இடங்களைத் தேர்வு செய்து, அந்த இடங்களின் நன்மை தீமைகளை விளக்கி வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் எந்த இடங்களைத் தேர்வு செய்துள்ளது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏற்கனவே உள்ள ஏர் ஸ்ட்ரிப்: ஓசூரில் ஏற்கனவே விமான ஓடுதளம் ஒன்று இருக்கும் நிலையில், அங்கேயே விமான நிலையத்தை உருவாக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது.
ஓசூர் விமான ஓடுதளத்திற்கு தெற்கே உள்ள இடம்: இது ஏற்கனவே ஏர் ஸ்ட்ரிப் இருக்கும் தளத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
தோகரை அக்ரஹாரம் கிராமம்: இது தேன்கனிக்கோட்டையில் உள்ள விமான ஓடுபாதையில் இருந்து 10 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
சூளகிரி கிராமத்திற்கு அருகே உலகம் என்ற பகுதியில் உள்ள இடம்: இது ஓசூர் விமான ஓடுதளத்தில் இருந்து தென்கிழக்கே 27 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
தாசப்பள்ளி: இது ஓசூர் விமான ஓடுதளத்தில் இருந்து வடகிழக்கே 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும்.
இந்த ஐந்து இடங்களையும் நேரில் ஆய்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அதிகாரிகள், அறிக்கையை உருவாக்கியுள்ளனர். இங்குள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் மற்றும் நீர்நிலைகள் ஏர்போர்ட் அமைக்கச் சவாலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிக்கல் என்ன: ஏற்கனவே இருக்கும் விமான ஓடுதளம் அருகிலேயே ஏர்போர்ட் அமைத்தால் அது சரியாக இருக்கும் என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், அந்த வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அருகே இருப்பதால் அங்கு ஏர்போர்ட் நிலையம் அமைப்பது கடினம். அதற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி தொடங்கி பல அனுமதிகள் தேவைப்படும்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் தலைநகராகப் பெங்களூர் இருக்கிறது. அதேநேரம் இடநெருக்கடி காரணமாக ஆபீஸ் பெங்களூரில் இருந்தாலும் பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் ஓசூரில் இருக்கிறது. இதனால் ஓசூரில் அமையவுள்ள ஏர்போர்ட் தொழில்துறையினருக்கு மிகப் பெரியளவுக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications