மெஜாரிட்டி நம்பர் மாற்றம்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெல்வாரா? ஆதரவுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் வேண்டும்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். காலை 9.30 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டு அதன் மீது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இதில் வென்றால் மட்டுமே முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி தொடரும். இல்லாவிட்டால் கலைக்கப்படும். இந்நிலையில் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெல்வாரா? அவருக்கு எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். இதனால் விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் விஜய் முதல்வராகி உள்ளார்.

பிற கட்சிகளின் ஆதரவில் ஆட்சியை பிடித்துள்ளதால் மே 13ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டார். அதன்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார்.
அதன்பிறகு அந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார். இதையடுத்து எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிப்பார்கள். டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடக்கும். இதில் மெஜாரிட்டியை நிரூபித்தால் விஜய்யின் ஆட்சி தப்பிக்கும். இதனால் தமிழக அரசியலில் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. சட்டசபையில் விஜய் மெஜாரிட்டி பெற எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பது தான் கேள்வியாக உள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் மொஜாரிட்டியை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போது விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 123 ஆக குறைந்துள்ளது.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் ஒரு ஓட்டில் திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனை வென்ற தவெகவின் சீனிவாச சேதுபதிக்கு வாக்களிக்க நீதிமன்றம் தடை போட்டுள்ளது. இதனால் அவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது. இதனால் எம்எல்ஏக்களின் பலம் 223ல் இருந்து 222 ஆக சரிகிறது. மேலும் ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக உள்ளார். அவருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கு உரிமை கிடையாது. நம்பிக்கை வாக்கெடுப்பில் சமமான ஓட்டுகள் பெற்றால் மட்டுமே அவரால் வாக்களிக்க முடியும்.
இதனால் மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் சட்டசபையில் தவெகவிற்கு தற்போது 106 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். இதில் ஒருவர் சபாநாயகர் என்பதால் பலம் 105 ஆக சரியும். ஆனால் தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட்டின் 2 எம்எல்ஏக்கள், விசிகவின் 2 எம்எல்ஏக்கள், ஐயூஎம்எல் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், அமமுகவில் வென்று தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதனால் விஜய் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி விஜய்க்கு, அதிமுகவின் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியை சேர்ந்த எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அந்த அணியில் மொத்தம் 30 எம்எல்ஏக்கள் வரை உள்ளதாக கூறப்படும் நிலையில் தேவை என்றால்அவர்களின் ஆதரவு இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் சட்டசபையின் எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் மெஜாரிட்டி இப்படி இருந்தாலும் கூட கடைசி நேரத்தில் அது மாறலாம். அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது சபையில் இருப்போரை வைத்து தான் மெஜாரிட்டி கணக்கீடு செய்யப்படும். 222 எம்எல்ஏக்களில் 22 பேர் இன்று சபைக்கு வராவிட்டால் மெஜாரிட்டி எண்ணிக்கை 101 ஆக சரியும். அப்படியென்றால் விஜய்யால் தன்னிடம் உள்ள தவெக எம்எல்ஏக்களின் ஆதரவிலேயே ஜெயிக்க முடியும். இதனால் இன்றைய தினம் விஜய் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications