முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.. முதிர்வுத்தொகை பெற இன்றே கடைசி.. வெளியானது அறிவிப்பு
சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வுத்தொகை கிடைக்காத பயனாளிகள், இன்று அதாவது அக்டோபர் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் முன்னெடுத்து வருகிறது.. அதில் ஒன்றுதான், பெண்கள் பாதுகாப்புத் திட்டமாகும்.
அதாவது, அரசின் நேரடி முதலீட்டின் மூலம், பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலின பாகுபாட்டை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பெண் குழந்தை: இந்த திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் 25,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 ரூபாயும் நேரடியாக பெண்குழந்தையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறையும் இந்த வைப்புத்தொகை புதுப்பிப்பு செய்யப்பட்டு அந்த பெண்குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் வட்டியுடன் சேர்த்து தொகை வழங்கப்படும். அதுவும், மாவட்ட சமூக நலத்துறை மூலமாக, பெண் குழந்தையின் கணக்கிற்கே நேரடியாக பணம் வழங்கப்படும்.
உதவித்தொகை: இந்த திட்டத்தில் சேர வேண்டுமானால், 1.8.2011 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையை பெற பெற்றோர்கள், இன்றைக்குள் அதாவது, அக்டோபர் மாதம் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அல்லது இ-சேவை மையங்கள் மூலம் கூட இதற்காக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாய்ப்புகள்: தமிழகத்தை சேர்ந்த 35 வயதிற்கு உள்ளே உள்ள பெற்றோர் தமிழக அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்திருந்தால், இந்த சலுகையை பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதேபோல ஆண் வாரிசுகள் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பெற்றோர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதேபோல, பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்?
பெற்றோரின் ஆதார் கார்டு, பெற்றோரின் குடியிருப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் நம்பர் இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதிகள்:
- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.
- இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் பத்து வருடங்களுக்கு மேல் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்து இருக்க வேண்டும்.
- இணையதளத்தின் வாயிலாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationschild-welfare/chief-ministers-girl-child-protection-scheme












Click it and Unblock the Notifications