ரூ.25 கோடியில் பிளான்.. சென்னையில் சர்வதேச தரத்தில் மாறப்போகும் 5 விளையாட்டு அரங்கம்! இதோ லிஸ்ட்
சென்னை: சென்னையில் உள்ள 5 முக்கிய விளையாட்டு அரங்ககளை சர்வதேச அளவில் தரம் உயர்த்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.25 கோடியில் வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்கங்களிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சென்னை மாநகரில் உள்ள 5 முக்கிய விளையாட்டு அரங்கங்ககளை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் வகையில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛2023 - 2024 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உட்கட்டமைப்புகளைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஜவர்ஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் 2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் 4 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டிலும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications