குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா..தமிழக அரசு செம அறிவிப்பு
குலசேகரப்பட்டினம் செயற்கைக்கோள் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா, விண்வெளி எரிபொருள் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள், வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயனங்களை உற்பத்தி செய்வதற்காக தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.
விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மூலம் ஏவப்படும் செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்காக 2,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அந்த நிலங்களை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கு அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி என்ற சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராக்கெட் உருவாக்குவதற்கான பொருட்களை வெகு தொலைவில் இருந்து இங்கு எடுத்து வர கூடுதல் செலவுகள் பிடிக்கும் என்பதால் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் ஒரு திட்டத்தைத் தீட்டி வருகிறது.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட்களை உருவாக்குவதற்கு தேவையான பொருட்களை, அதற்கு அருகிலேயே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைத்து அங்கு பொருட்களை தயாரித்து வழங்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிமிடெட் (டிட்கோ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா, விண்வெளி எரிபொருள் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குலசேகரப்பட்டினம் செயற்கைக்கோள் ஏவுதளம் அருகே மின்னணு, பொறியியல் கட்டமைப்புகள், வான்வெளி இயந்திரங்களுக்கான ரசாயனங்களை உற்பத்தி செய்வதற்காக தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications