தமிழகத்துக்கு தீபாவளி பரிசு.. ரேஷனில் இலவச வேஷ்டி - சேலை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும். அதேபோல் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதனை பெறுவதில் முதியோர்களின் கைரேகை தோல்வி அடைந்தாலும் கையெழுத்து போட்டு வேஷ்டி, சேலைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வேஷ்டி, சேலைகளை அடுத்தவாரம் முதல் முதியோர் ஓய்வூதி திட்ட குடும்ப அட்டைதாரர்கள் பெறலாம்.
இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தீபாவளி (2025) பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை விநியோகிக்கப்பட வேண்டும்..
மாவட்ட வழங்கல் அலுவலர் தங்களுக்குரிய மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலின்படி இலவச வேஷ்டி மற்றும் சேலைகளை கிடங்குகளில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நியாயவிலை கடை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications