சாட்டையை சுழற்றிய விஜய்.. 100+ டெண்டரை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு.. பின்னணி
சென்னை: தமிழகத்தில் பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, மின்சாரத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட 100க்கும் மேலான டெண்டரை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு திடீரென்று இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். தமிழக அமைச்சரவையை எடுத்து கொண்டால் முதல்வர் உள்பட மொத்தம் 35 பேர் வரை அமைச்சராக இருக்க முடியும். அதன்படி இன்று முழுமையாக அமைச்சர்கள் பதவியேற்று உள்ளனர். அனைத்து அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் விஜய் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முறைகேடு செய்த அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று முதல்வர் விஜய் அதிரடியாக நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதாவது மே 12ம் தேதி முதல் மே 22ம் தேதி வரை பல்வேறு துறைகளில் விடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்பட பல்வேறு துறைகள் சார்பில் வெளியிடப்பட்ட இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறுகிய கால டெண்டர் என்பது 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் செய்ய வேண்டிய பணிக்கானதாக இருக்கும். உதாரணமாக சாலை பராமரிப்பு, குடிநீர் குழாய் பராமரிப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை மையப்படுத்தி இந்த குறுகிய கால டெண்டர்கள் வழங்கப்படும். இந்நிலையில் தான் குறுகிய கால டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் விஜய் நினைக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த உடனேயே முறைகேடுகளுக்கு குறுகிய கால டெண்டர்கள் வழிவகுக்கிறது. இதனால் குறுகிய கால டெண்டர்கள் அடிப்படையில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு இடங்களில் குறுகிய கால டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தான் மே 12 முதல் மே 23ம் தேதி வரை விடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்ப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உள்பட பிற துறைகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரடியாக அரசு பணிகளை மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளது.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கம் தொட்டி கட்டுமான பணிக்காக ரூ.16 லட்சத்து, 83 ஆயிரத்து 194 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது. மே 19ம் தேதி காலை 9 மணிக்கு டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியானது. நேற்று மாலை 3 மணிக்குள் டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று மாலை 4 மணிக்கு டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. டெண்டர் பணிகள் அனைத்தும் 6 மணிநேரத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டது.
ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக புஸ்ஸி ஆனந்த் உள்ள நிலையில் இது சர்ச்சையானது. விதிகளை பின்பற்றவில்லை என்று கூறிஅந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கயல்விழி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications