ஒரேயடியாக.. ஜூலை 31ம் தேதிவரை அரசு, தனியார் பொதுப் பஸ் போக்குவரத்துக்கு தடை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவை இயக்கப்படாது என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி முதல், நாடு தழுவிய அளவில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. படிப்படியாக பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் நீண்ட தூர பஸ் சேவைகள் இயக்கப்படவில்லை.
மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும் பேருந்து சேவை இயக்கம் என்ற நிலை, பிறகு மண்டலங்களுக்கு இடையே என்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

தமிழக அரசு அறிவிப்பு
இந்தநிலையில்தான், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருந்த காரணத்தால், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை பொது போக்குவரத்து இருக்காது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. கொரானா வைரஸ் நோய் தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழ் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சில தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31ம் தேதி வரை தடை
கொரானா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க அம்மாவின் அரசு தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுவரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது.

மக்கள் ஒத்துழைப்பு
தற்போது தமிழ்நாட்டில் கொரோனோ நோய்த்தொற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நோக்குடன், ஜூலை 31ம் தேதி முடிய, தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவை இயக்கப்படாது. தமிழக அரசின் கொரானா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு இ பாஸ்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அவசியம் மருத்துவ அவசர தேவைகளுக்காக மட்டும் இ பாஸ் வழங்கினால் போதும் என்று அறிவுரை மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற காரணத்துக்கு மட்டும் இ பாஸ் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

ஆம்னி பேருந்துகள் இயக்கம்
ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின், அன்பழகன் இதுபற்றி கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் பேருந்து துறையை நம்பி இருப்போருக்கான, வாழ்வாதாரத்தை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் வரை, நான்கு மாதங்கள் ஆம்னி பேருந்துகள் இயங்காத நிலை உள்ளது. பஸ் ஓடாத நாட்களுக்கும் சாலை வரி கட்டுவதற்கு அரசு நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications