கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.. ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை என்று ஏற்கெனவே தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இந்நிலையில் கூடுதல் உத்தரவுகளை பிறப்பிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்திருக்கிறது.
அதாவது, துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தையும் சேர்த்து விசாரிக்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சென்னைப்பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.

இந்த பல கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்தது. இந்நிலையில் யு.ஜி.சி தலைவரையும் சேர்த்து தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார். தமிழக அரசு கடந்த டிச.9ம் தேதி மற்றும் டிச.13ம் தேதி யு.ஜி.சி தலைவரை விடுத்து பிற மூன்று உறுப்பினர்களை கொண்டு தேடுதல் குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டது.
ஆனால் அந்த அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும், யு.ஜி.சி தலைவரை இணைத்து துணைவேந்தர் தேடுதல் குழு அரசாணையை வெளியிட வேண்டும் என பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராகத்தான் தற்போது உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆளுநரின் உத்தரவு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன செயன்முறையில் அரசியல் சாசன விதிகள்படி நடைமுறை உரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் சாசன விதிகளுக்கு முரணாகவும் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் மேற்கூறிய விவகாரங்களையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காக தற்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் விவர மனுவையும் ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications