செஸ் ஒலிம்பியாட்.. பிரம்மாண்ட நிறைவு விழாவுக்கு தயாராகும் சென்னை.. ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழாவை ஓடிடி தளத்தில் வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 6 சுற்றுகளுக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது.

தொடக்க விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா கடந்த 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பின்னர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பெருமை, இலக்கியம், சோழர்கள் என செய்து காட்டப்பட்ட நிகழ்த்துக்கலை அனைவரையும் பிரமிக்க வைத்தது.

பரபரப்பாகும் போட்டிகள்
தற்போது 6 சுற்றுகளுக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் பரபரப்பு அதிகமாகி வருகிறது. குறிப்பாக முன்னணி அணிகளாக கருதப்படும் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஒரு தோல்வியும் புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து நாட்டு அணிகளும் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவு விழா
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகான நிறைவு விழா வரும் ஆகஸ்ட் 9ம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. நிறைவு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிறைவு விழா தொடக்க விழாவையும் விடவும் இன்னும் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஓடிடியில் வெளியீடு
இந்த நிலையில் நிறைவு விழாவை ஒளிபரப்ப காட்சி ஊடகங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான உரிமம் பெறுபவர்களுக்கு ஓராண்டிற்கான ஒளிபரப்பு உரிமமும் வழங்கப்படவுள்ளது. இதனால் மக்களிடையே நிறைவு விழா குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications