சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி மீது நடவடிக்கை கோரிய வழக்கு.. தமிழக அரசு சொன்ன அதிரடி பதில்
சென்னை: சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பியம் ஜி.தேவராஜன் என்பவர் 2017-ம் ஆண்டு பொதுநல மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எனவே அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், "வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் கூறும் புகார் ஏற்புடையதல்ல. தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தினோம்.அ தில் டான் பாஸ்கோ பள்ளியில் உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று 2018-ம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என பள்ளி கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
டான் பாஸ்கோ பள்ளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மனுதாரரின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எவ்வித சம்பந்தமில்லாமல் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications