ஆசிரியர்களுக்கு அரசு சொன்ன குட்நியூஸ்.. வெளியானது தமிழக அரசின் புதிய அரசாணை
சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் அளித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் 108 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி தகுதியான உதவிக் கல்வி அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் (முதுநிலை ஆசிரியர் நீங்கலாக) ஆகியோரின் பெயர்ப் பட்டியலை அனுப்ப வேண்டும்.

அந்தப் பட்டியலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தேர்ச்சி பெற்றதற்கான நகல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணை உட்பட ஆவணங்களை இணைக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லையெனில் அதற்குரிய 'இன்மை' அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இதற்கிடையே பட்டியலில் இருந்து தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர் முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே, மாவட்ட அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நிர்ணயம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்நிலை பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, அத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளை ஒரே அலகின்கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் கருத்துரு அனுப்பி இருந்தார்.
அந்த கருத்துருவை ஏற்று ஆதி திராவிடர் நலத்துறை சார்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி.லட்சுமி பிரியா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.அரசாணையில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகள் ஒரே அலகின்கீழ் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு (சீனியாரிட்டி) தயாரிக்குமாறு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கும் அரசாணையில் அறுவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications