மனிதக் கழிவுகளை அகற்றும் விவகாரம்.. அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?.. ப.சி சுளீர் கேள்வி
சென்னை: மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து, 2013-ல் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறை ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறுவது காகித அளவிலேயே இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்கிறது, மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களின், உரிமைகளுக்காகப் பணியாற்றும் சஃபாயி கர்மசாரி அந்தோலன் என்னும் அமைப்பு.
உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) July 10, 2019
இந்தநிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144 பேர் என்றும் கணக்கீட்டை வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன் என்று தெரிவித்துள்ள அவர், மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.