8-ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்-பாஸ்.. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?.. தமிழக அரசு புதிய தகவல்!
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் ஆல்-பாஸ் செய்யப்படுகின்றனர் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேகம் காட்டும் தமிழகம்.. போதிய வேக்சின் ஒதுக்காமல் தாமதிக்கும் மத்திய அரசு.. அதிர்ச்சி தரும் பின்னணி
10-ம் வகுப்பு தேர்வு ரத்து
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு
மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை கடந்த அ.தி.மு.க அரசு ஒத்தி வைத்தது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளதால் பிளஸ் 2 தேர்வு எப்போது நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள், கல்வி நிபுணர்களிடம் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பது எப்போது?
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தளர்வில்லாத முழு ஊரடங்கு முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தொடக்க கல்வி இயக்குனர் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
அனைவரும் ஆல்-பாஸ்
முழு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும், பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள், இதர நலத்திட்டங்கள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இந்த கல்வியாண்டிலும் 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைவருமே ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.
தேக்க நிலை கூடாது
மேலும் முழு ஆண்டு தேர்வு மற்றும் 10,11-ம் வகுப்பு பயிலும் மாணக்கர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதும் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எட்டாம் வகுப்பு வரையில் எந்த ஒரு மாணவனையும் தேக்க நிலையில் வைக்க கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாது. இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு தொலைபேசி அல்லது இ-மெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று அந்த சுற்றைக்கையில் கூறப்பட்டுள்ளது.