"தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." தமிழ்நாடு பட்ஜெட் 2024! அட்டகாசமான லோகோ வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கலாக உள்ள நிலையில், இந்த 2024-25 பட்ஜெட்டிற்கான முத்திரைச் சின்னத்தை இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்.1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தாண்டு ஏப்ரல், மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. ஏற்கனவே நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அம்மாநில அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையைப் படிக்க மறுத்தது தனிக் கதை. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த சூழலில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப். 15ஆம் தேதி பதிலளித்தார். இதற்கிடையே நாளை தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது.
நாளைய தினம் தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தனியாகத் தாக்கல் செய்கிறார், தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்திரை சின்னம் வெளியீடு: இதற்கிடையே தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான முத்திரை சின்னம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி என்ற வாசகத்துடன் 2024-2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை என்பது இந்த முத்திரை சின்னத்தில் இருக்கிறது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ம் ஆண்டில் கொரோனாவை முறியடித்து, புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி, நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் திமுக அரசு "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை "தடைகளைத் தாண்டி" எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்திரைச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications