கிளாம்பாக்கம் மொத்தமாக மாறப்போகுது.. ரயில் நிலையம் அருகே கைவைத்த தமிழக அரசு.. வெளியான அறிவிப்பு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை ஆகாய நடைமேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 5900 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 22 வருடங்களாக இயங்கி வந்த கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கத்திற்கு மாறி உள்ளது. அடுத்த 30 வருடங்களில் சென்னையில் ஏற்பட போகும் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.

தற்போது திருச்சி மார்க்கமாக கன்னியாகுமரி வரை உள்ள தென் மாவட்ட பேருந்துகள், கள்ளக்குறிச்சி மார்க்கமாக செல்லும் சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலைகளை கடந்து செல்லவது இயலாத காரியமாக உள்ளது.
லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் ஜிஎஸ்டி சாலையை பொதுமக்கள் சிரமம் இன்றி கடந்து செல்லவும், பேருந்து நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்சார ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சுமார் ரூ.74.5 கோடி மதிப்பீட்டில், 220 மீட்டர் நீளத்தில் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கவும், இதில் 8 மீட்டர் அகலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக அமைக்கவும், நடைமேம்பாலத்திற்கு பூமி பூஜை கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி நடந்தது. . இந்து அறநிலையத்துறை மற்றும் சிஎம்டிஏ துறை அமைச்சர் சேகர்பாபு இந்த பூஜையில் அன்று பங்கேற்றார்.
கிளாம்பாக்கம் நடைமேம்பாலத்தில் எஸ்கலேட்டர்கள், மின் தூக்கிகள், படிக்கட்டுகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை அடுத்த 12 மாதத்திற்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பணிகள் முடிவடைந்தவுடன் மேம்பாலம் திறக்கப்பட்டு, பயணிகள் சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று தமிழக அரசு மார்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரை வண்டலூர் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பிரிமியர் லெதர் கார்ப்பரேசனுக்கு சொந்தமான 5900 சதுர மீட்டர் நிலம் மட்டும் கையகப்படுத்தப்படுகிறது. அங்கு ஒரு கிணறு, செக்யூரிட்டி ரூம் 1, ஆஸ்பெட்டாஸ் ஷெட் 3, கழிவறை 1, ஆகியவை உள்ளன. இதேபோல் ஐந்து மாமரங்கள், 2 பாதமரங்கள், ஒரு வேப்பமரம், இரண்டு அரச மரம், 20 தென்னை மரம், 2 நவால் மரம், ஒரு கொய்யா கன்று, தென்னங்கற்று இரண்டு ஆகியவை உள்ளன.
2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி இந்த கையகப்படுத்தல் செய்யப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில்வே நிலையத்திற்கு இடையே ஸ்கைவாக் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இங்கு மறுகுடியமர்த்த வேண்டியவர்கள் யாரும் இல்லை.. இந்த திட்ட வரைப்படத்தை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம், தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் பார்வையிடலாம்" இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications