தமிழ்நாட்டில் இந்திக்கு மொத்தமாக தடையா? தமிழக அரசின் திட்டம் உண்மையா? வெளியான விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் இந்தி திணிப்பைத் தடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒரு புதிய மசோதாவை சட்டமன்றத்தில் ஆளும் திமுக தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அந்த சட்டம் தாக்கல் செய்யப்படும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று அரசின் உண்மை சரிபார்ப்பு குழு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சட்டம் இந்தி விளம்பர பலகைகள், இந்தி விளம்பரங்கள், அரசு அலுவலகங்களில் இந்தி பெயர்கள், இந்தி விலாசங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்ய முயலும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்து இருந்த. இந்தி படங்கள், பாடல்களை தடை செய்ய போவதாக பரவும் செய்திகள் தவறானவை அதற்கு தடை இருக்காது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தரப்பு தகவல்கள்
முன்னதாக இந்த மசோதா குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் அவசரக் கூட்டம் நேற்றிரவு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. "நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம். அதை மதித்து நடப்போம். ஆனால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்" என்று திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையை, பாஜகவின் வினோஜ் செல்வம் "முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது" என்று விமர்சித்துள்ளார். மொழியை அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம், கரூர் விசாரணை மற்றும் ஆம்ஸ்ட்ராங் பிரச்சினைகள் போன்ற அண்மைய நீதிமன்ற வழக்குகளில் பின்னடைவைச் சந்தித்த திமுக, சர்ச்சைக்குரிய ஃபாக்ஸ்கான் முதலீட்டு விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்தி மொழி விவாதத்தைப் பயன்படுத்துவதாக வினோஜ் செல்வம் குற்றஞ்சாட்டினார்.
பட்ஜெட் சின்னத்தில் தேசிய ரூபாய்
நடப்பாண்டு மார்ச் மாதம், 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் சின்னத்தில் தேசிய ரூபாய் சின்னத்திற்குப் '₹' பதிலாக ரூ என்ற தமிழ் எழுத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பயன்படுத்தியது. இந்த நடவடிக்கை பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனாலும், இது தேசிய சின்னத்தை நிராகரிப்பதற்கான நடவடிக்கை அல்ல, மாறாக தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கான முயற்சி என்று திமுக தரப்பு வாதிட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பைத் தடுக்கும் நோக்கில், மாநில அரசு ஒரு புதிய மசோதாவை சட்டமன்றத்தில் ஆளும் திமுக தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சட்டம் இந்தி விளம்பர பலகைகள், இந்தி விளம்பரங்கள், அரசு அலுவலகங்களில் இந்தி பெயர்கள், இந்தி விலாசங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்ய முயலும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
அரசு உண்மை சரிபார்ப்பு குழு அளித்துள்ள விளக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி! தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே. "அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை " என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்!, என்று கூறி உள்ளது.
ஸ்டாலின் அவசர ஆலோசனை
அதே சமயம் இன்னொரு பக்கம் தமிழ்நாடு சட்டசபையில் விரைவில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2025-26ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை விரைவில் தாக்கல் செய்கிறார். அதேபோல் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வைக்கும் மசோதா தாக்கலாக வாய்ப்பு உள்ளது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் அவசரமாக இது தொடர்பாக ஆலோசனைகளை, சந்திப்புகளை நடத்தினார். ஸ்டாலின் சார்பாக மூத்த வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ உள்ளிட்டோரிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.
அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக எம்.பி., என்.ஆர். இளங்கோ, அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்துள்ளதால் அந்த மசோதா அதிக கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications