பத்திரப்பதிவு போட்ட "குண்டு".. வீடு வாங்குவதில் திடீர் சிக்கல்.. தமிழக அரசின் பதிவுக்கட்டணம் குறையுதா
சென்னை: பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தி உள்ள நிலையில், அவைகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடிக்க துவங்கி உள்ளன.
தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் போலி பத்திர சேவைகளை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கட்டண உயர்வு: அதன் ஒருபகுதியாக சமீபத்தில், பத்திரப்பதிவு கட்டணத்தை டபுள் மடங்காக உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை தந்துவரும்நிலையில், தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் 9 சதவீதம் வசூல் செய்யப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வெடித்து கிளம்பி உள்ளது.
திடீர் அதிர்ச்சி: இதுதொடர்பாக கிரெடாய் (சென்னை) தலைவர் எஸ்.சிவகுருநாதன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "இந்த கட்டண உயர்வினால், சொந்தமாக வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சியில் உள்ளன.. இதனால், பத்திரப்பதிவு குறையும். பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.
கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும். ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது.. எப்படி உடனே ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் பணத்தை புரட்ட முடியும்.. இந்த கட்டணமும் அதிகரித்துள்ளது.. வழிகாட்டி மதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிருப்தியை தந்துள்ளது" என்றார்.
பாமக நிறுவனர்: இந்த கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்று, அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது.. அதன்பிறகு, 20 வகையான சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை கசக்கிப் பிழிவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்பார்ப்பு: ஏற்கனவே, வீட்டுக்கடனுக்கான வட்டி கடுமையாக அதிகரித்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது பதிவுக் கட்டணமும் 2 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது, பரவலான அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து, பத்திரப்பதிவு துறை, இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications