சென்னைக்கு அருகே அமையும்.. மிகப்பெரிய சர்வதேச நகரம்.. ரெடியாகும் குளோபல் சிட்டி.. முக்கிய அறிவிப்பு
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ நிறுவனம்.
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று ( தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நகரமயமாக்கலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சென்னை அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய ஒருங்கிணைந்த நகரத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 'குளோபல் சிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், உலகத் தரத்திலான வசதிகளை பொதுமக்களுக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் சிட்டி
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) இந்த திட்டத்தை செயல்படுத்தும். வரும் நிதியாண்டில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரத்தை உருவாக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (Tidco) நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களின் பட்டியல் தற்போது மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபின்டெக் மண்டலங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு நகரத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், சிறந்த போக்குவரத்து மற்றும் இணைப்பு வசதிகளையும் உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருமழிசை போன்ற முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட துணைக்கோள் நகரத் திட்டங்கள் இன்னும் முழுமையடையாத நிலையில், இந்த புதிய திட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த குளோபல் சிட்டி குறித்து டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால், மாநிலத்தில் நகரமயமாக்கல் விகிதம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
நகரங்களை சீரற்ற முறையில் விரிவுபடுத்துவதை விட, ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என நகர திட்டமிடல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக, சென்னை அருகே இந்த புதிய நகரம் உருவாக்கப்படும்.
குளோபல் சிட்டி - சென்னை புதிய நகரம்
இந்த புதிய நகரம் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபின்டெக் வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், ஷாப்பிங் வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள் போன்ற பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கும்.
இது பொது மற்றும் தனியார் துறை கல்வி மற்றும் சுகாதார வசதிகளையும் வழங்கும். முன்னதாக 2024 இல், சி.எம்.டி.ஏ (CMDA) மின்சூர், திருமழிசை, செங்கல்பட்டு, மாமல்லபுரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் ஆறு துணைக்கோள் நகரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிப்பதாக அறிவித்திருந்தது.
திட்டமிடலின் முக்கியத்துவம்
சென்னையின் புறநகரில் ஒரு உலகளாவிய நகரத்தை உருவாக்குவதற்கு விரிவான திட்டமிடல் அவசியம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வணிகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். இது வீடுகள், கடைகள் மற்றும் பிற தொடர்புடைய வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவும். சரியான இடத்தை தேர்ந்தெடுத்து, அதை நன்கு திட்டமிடுவதன் மூலம், முதலீடுகளையும், திறமையான மனிதர்களையும் ஈர்க்கும் நகரமாக சென்னையை உருவாக்க முடியும்.
போக்குவரத்து இணைப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் காரணமாக செங்கல்பட்டு மற்றும் பரந்தூர் ஆகியவை சிறந்த தேர்வுகளாக இருக்கலாம் என்று நகர திட்டமிடல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications