மெகா மாற்றம்.. தூக்கியடிக்கப்படும் ஐஏஎஸ் ஆபிசர்ஸ்.. அடித்து ஆடும் ஸ்டாலின்! பின்னணியில் மாஸ் ப்ளான்!
சென்னை: தமிழகத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் இது இரண்டாவது அதிரடி மாற்றம் என்பதும், 4 மாதங்களில் 4வது மாற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றம் செயல்படுவதற்கான பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவி என சில மாற்றங்கள் இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து 27ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி திருவண்ணாமலை, திருப்பத்தூர், நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்கள் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சார் ஆட்சியர் உள்ளிட்ட பணிகளில் இருந்தவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் ஆகவும், மாவட்ட ஆட்சியர்களாக இருந்தவர்கள் அரசுத் துறைகளின் இணை ஆணையர், இயக்குனர், மேலாண்மை இயக்குனர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நான்கு மாதங்களில் நான்காவது மாற்றமாக தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். உயிர் கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தியும், பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சந்திரமோகனும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பொதுப்பணித்துறையில் இருந்த மங்கத் ராம் சர்மா நீர் வளத் துறைக்கும் பொதுப்பணித்துறை செயலாளராக ஜெயகாந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மருத்துவ துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் மாற்றப்பட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், மின்வாரிய தலைவராகவும் கூட்டுறவுத் துறை செயலாளராக சத்திய பிரதா சாகுவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முறை பணியிட மாற்றம் பற்றிய அறிவிப்பு முற்றிலும் தமிழில் இருந்தது. அதிகாரிகளின் பெயர், அவர்கள் பணியிடம், யாருக்கு பதிலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த பட்டியல் தமிழிலேயே வெளியாகி இருந்தது. நீண்ட காலத்திற்கு பின் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றத்திற்கான காரணம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பாலியல் தொந்தரவு, குற்ற சம்பவங்கள், மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பது ஆகியவை அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மின்சாரம், உணவு ஆகிய துறைகளும் சில சிக்கல்கள் இருந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற துறைகள் சர்ச்சைகளில் சிக்குவது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இதனால் தேர்தலுக்கு முன்னதாக அதிருப்தியில் இருக்கும் துறைகளை சீரமைக்கவே இந்த ஏற்பாடு எனவும், இதன் காரணமாகவே சந்திரமோகன் உள்ளிட்ட சீனியர்கள் முக்கியத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications