ஏப்ரலில் மட்டும் 2வது முறை பயணம்.. அதிகாலையில் டெல்லிக்கு பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி! இது தான் காரணமா?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை ஆறு மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்ற அவர் செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் அவர் 2வது முறையாக டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.
பதினெட்டாவது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குப்பதிவானது இரண்டுகட்டமாக நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்போடு வைக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் ஆறு கட்ட தேர்தல் மீதம் இருக்கும் நிலையில் ஜூன் - 1ஆம் தேதி இறுதிக் கட்ட வாக்குப் பதிவும், அதன்பின் ஜூன் 4-ம் தேதி வாக்கு இயந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு திரட்டினர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் 35 நாட்கள் வாக்கு எண்ணிக்கைக்கு கால அவகாசம் இருக்கிறது. இதை அடுத்து தலைவர்கள் பலரும் சற்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் கோடை வாசஸ்தலங்களில் சிறிது காலம் தங்கவுள்ளனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கவுள்ளார். இதே போல் பல தலைவர்களும் கோடை காலத்தை கழிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தனது மனைவியுடன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் வரும் 30 ஆம் தேதி சென்னை திரும்புகிறார். இந்த மாதத்தில் மட்டும் அவர் 2வது முறையாக டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ஆர் என் ரவி இந்தமுறை சொந்த பயணமாக தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவரது பயணத்தில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னை வந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications