திடீரென பிளைட் ஏறிய ஆளுநர் ஆர்.என் ரவி.. டெல்லிக்கு "அவசர" பயணம்.. இதுதான் பின்னணி காரணம்?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவி திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு உள்ளார். சற்று முன் விஸ்தாரா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று புகார்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இங்கே விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இவர்கள் அடுத்தடுத்து பலியானார்கள்.
அடுத்த சம்பவம்: இந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன் தற்போது சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவரின் கொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
ஆளுநர் ரவி டெல்லி பயணம்; இப்படி அதிகாரிகள் மாற்றத்திற்கு இடையே ஆளுநர் ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். 5 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி பயணம் செல்ல உள்ளார்.
ஐந்து நாள் பயணம் முடித்து 19 -ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 5 நாட்கள் அங்கே பல்வேறு சந்திப்புகளை ஆளுநர் ரவி மேற்கொள்ள உள்ளார். முதலில் இது தனிப்பட்ட பயணம் என்று கூறப்படுகிறது.
அவர் பல்வேறு கோவில்களுக்கு, குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ள பயணம் மேற்கொள்கிறார். இது போக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவும் ஆளுநர் ரவி திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, கள்ளச்சாராயம் தொடர்பாக ஏற்கனவே ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் புகார் வைத்துள்ளனர்.
ஆளுநர் ரவியிடம் இதேபோல் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாகவும் பலர் புகார்களை வைத்துள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக அவர் டெல்லியிடம் ரிப்போர்ட் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமித் ஷாவிடம் அவர் புகார் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications