ஆக்ஷனை ஆரம்பித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.. நாளை டெல்லி பயணம்.. அமித் ஷாவுடன் ஆலோசனை
சென்னை: தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, முதல்முறையாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
நாகாலந்து ஆளுநராக இருந்த ரவி தமிழகத்தின் ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை, அவர், ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவியேற்றதுமே மரபுக்கு மாறாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

மரபை மீறி பிரஸ் மீட்
தமிழகத்தில் ஆளுநர்கள் அவ்வளவு எளிதாக செய்தியாளர்களை சந்திப்பது கிடையாது. 2018ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான சர்ச்சை விவகாரத்துக்கு விளக்கம் அளிப்பதற்கு செய்தியாளர்களை சந்தித்தார். அதன்பிறகு இதுதான் முதல் முறை ஆளுநர் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. புதிய ஆளுநர் ரவி முதல்நாளே செய்தியாளர்களை சந்தித்து ஆச்சரியம் அளித்தார்.

அதிரடி பதில்
முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்ததை போல, மாவட்ட அளவில் நீங்கள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொள்வீர்களா என்று நிருபர்கள் அப்போது கேள்வி எழுப்பியபோது, இப்போதுதான் பதவியேற்றுள்ளேன். போக போகத்தான் எனது செயல் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று அதிரடியாக பதிலளித்தார்.

சட்டம் ஒழுங்கு டிஜிபி
இதன்பிறகு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவை அவர் ராஜ்பவனுக்கு வரவழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த நிலையில்தான் ஆளுநராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நாளை ரவி டெல்லி கிளம்பிச் செல்கிறார்.

நாளை டெல்லி பயணம்
நாளை காலை 7 மணிக்கு டெல்லி கிளம்பிச் செல்கிறார் ரவி . டெல்லியில் அவர் நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசு நிர்வாகம், அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது ஆளுநர் கருத்து பரிமாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள்
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , ரவி, தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதன் பின்னணி தொடர்பாக சந்தேகம் வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ரவி தமிழகத்தில் நியமிக்கப்பட்டதன் மூலம் மாநில அரசுடன் மோதல் போக்கை மத்திய அரசு கையில் எடுக்கும் சூழ்நிலை இருப்பதாக அந்த கட்சிகள் சந்தேகம் தெரிவித்தன.

ஸ்டாலின் நட்பு
ஆனால் ஆளுநர் சென்னை வந்தபோது அவரை நேரில் சென்று வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின் . புதிய ஆளுநருடன் நட்பு ரீதியில் உறவை பேண வேண்டும் என்பது, முதல்வர் செயல்களில் இருந்து தெளிவாக தெரிந்தது. ஆனால் புதிய ஆளுநர் டெல்லி சென்று அமித்ஷாவுடன் என்ன பேசுகிறார் என்பது தெரியவில்லை. அவர் சென்னைக்கு வந்த பிறகு நாகாலந்து பாணியில் அதிரடிகளை காட்டுவாரா அல்லது அமைதியான முறையில் பணிகளை தொடர்வாரா என்பது தெரிய வரும் என்பதால் அவர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications