சென்னை ஏர்போர்ட் டூ கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்.. தமிழக அரசு நிதி ஒதுக்கியது!
சென்னை: இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ ரயில் திட்டமாக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.1,964 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருக்கிறது.
மொத்தம் 15.5 கி.மீ நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைய இருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எளிதாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு போக முடியும். அதேபோல தென் சென்னையின் முக்கியமான பகுதிகளை இந்த மெட்ரோ ரயில் நிலையம் கனெக்ட் செய்கிறது. எனவே போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.
சர்வதேச தரத்திற்கு சென்னை உயர்ந்து வருகிறது. அதேபோல சென்னையின் சிக்கல்களும் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சென்னைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனை சரி செய்ய ஆங்காங்கே மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் பொது போக்குவரத்தை அதிகரித்தால் மட்டுமே நெரிசல் குறையும் என்று ஆய்வுகள் சொல்வதால், மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தற்போது சென்னையில் இரண்டு வழித்தடத்தில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு பகுதியிலிருந்த புறநகர் பேருந்து நிலையம் கிளம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால், பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. எனவே இதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
குறிப்பாக மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம்பாலங்கள் இருப்பதால், மெட்ரோ பாலம் அமைப்பதில் சிக்கல் எழுந்தது. மறுபுறம் நிலம் ஒதுக்குவதிலும் இடையூறுகள் இருந்தன. இதனையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை, தமிழக அரசு மற்றும் மெட்ரோ அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதனையடுத்து சில திருத்தங்களுடன், விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பது குறித்து திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டது. இது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.9,445 மதிப்பீட்டில் இந்த புதிய வழித்தடம் அமைய இருக்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய இருக்கிறது.
1.விமான நிலையம்
2.பல்லாவரம்
3.கோதண்டம் நகர்
4.குரோம்பேட்டை
5.மகாலட்சுமி நகர்
6.திரு.வி.க. நகர்
7.தாம்பரம்
8.இரும்புலியூர்
9.பீர்க்கங்கரணை
10.பெருங்களத்தூர்
11.வண்டலூர்
12.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
13.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இந்த இடங்களில் ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்நிலையில் இந்த பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.1,964 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications