தமிழக அரசின் சிக்கலான வழக்குகளில் ஆஜராக சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி நியமனம்
சென்னை: அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை, தமிழ்நாடு அரசு தற்போது புதிதாக உருவாக்கி உள்ளது. சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக, அந்த பதவிக்கு, முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ. நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான நிலையில், 2013 மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜி, தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார். அதன் பின்னர், மறைந்த மூத்த வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்து வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம்வரை, அட்வகேட் ஜெனரல் பதவியில் இருந்து வந்த முத்துக்குமாரசாமி, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
எடப்பாடி கே. பழனிசாமி முதல்வரான பின்னர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் நியமிக்கப்பட்டார். இதுநாள்வரை, அப்பதவியில் இவர் இருந்து வருகிறார். இதுதவிர, தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக அட்வகேட் ஜெனரல் தவிர்த்து, 9 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உச்சநீதிமன்றம், சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராகி வருகிறார்கள். இந்நிலையில், அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை, தமிழ்நாடு அரசு தற்போது புதிதாக உருவாக்கி உள்ளது.
சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக, இந்த பதவிக்கு, முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஏ.எல். சோமயாஜியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆளுநர் ஒப்புதலின் பேரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் பி. செந்தில்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு சார்பில் ஏ.எல். சோமயாஜி ஆஜராக வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஏ.எல்.சோமயாஜி 1995 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டவர். 2001முதல் 2006-ம் ஆண்டு வரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும், அதன்பின்னர், அட்வகேட் ஜெனரலாகவும் இருந்துள்ளார்.