ஊட்டி & கொடைக்கானல் செல்ல விரைவில் கட்டுப்பாடுகள்? மேஜர் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தின் இரு முக்கிய மலைப் பிரதேசங்களாக இருக்கும் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வீக் எண்ட் வந்துவிட்டாலே கூட்டம் அதிகமாகிவிடுகிறது. இதற்கிடையே ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஊர்களின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கத் தமிழ்நாடு அரசு இப்போது உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் இரு முக்கியமான சுற்றுலா தளங்கள் என்றால் அது ஊட்டியும் கொடைக்கானலும் தான். முன்பெல்லாம் கோடைக் காலங்களில் தான் இங்குக் கூட்டம் உச்சத்தில் இருக்கும்.

கூட்டம்: ஆனால், இப்போதெல்லாம் வீக் எண்ட் வந்தாலே பொதுமக்கள் ஊட்டி கொடைக்கானலுக்குப் படையெடுத்து விடுகிறார்கள். இதனால் வார இறுதி நாட்களில் இந்த இரு மலைப் பிரதேசங்களில் டிராபிக் பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. அது மட்டுமின்றி அங்குத் தங்கும் விடுதிகளும் நிறைந்து விடுகிறது. இதையடுத்து ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் இ பாஸ் என்ற உத்தரவிடப்பட்டது.
அதேநேரம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுவதால் எந்தவொரு பிரச்சினையையும் பொதுமக்கள் சந்திப்பதில்லை. அதேநேரம் மலைப் பிரதேசத்தில் இப்படி ஒரே நேரத்தில் பலர் குவிந்துவிடுவதால் இதனால் அங்கு ஏதாவது சிக்கல் வருமா என்று பலரும் அஞ்சினர். ஹிமாச்சல பிரதேசத்தில் கூட இதன் காரணமாக மலையின் மீது இருந்த ஒரு கிராமத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு இருந்தது.
ஆய்வு: இதனால் ஒரே நேரத்தில் மக்கள் செல்வதால் இங்கும் ஆபத்து ஏற்படுமா என்று பலரும் அஞ்சினர். இதற்கிடையே உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஒரே நேரத்தில் எத்தனை வாகனங்கள் மற்றும் எவ்வளவு பேர் செல்லலாம்.. இரு சுற்றுலா தரங்களின் தாங்கும் திறன் ஆகியவை குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளன.
தமிழ்நாடு அரசு: இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "சென்னை ஐகோர்ட் கடந்த மார்ச்சில் பிறப்பித்த உத்தரவில், நீலகிரி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானலில் எத்தனை பேர் மற்றும் வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி கடந்த மார்ச் 27ல் இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் ஐஐடி, ஐஐஎம், அண்ணா பல்கலைக்கழகம் மூலம் இது தொடர்பாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
சுற்றுலா, போக்குவரத்து, புவியியல் துறைகள் என பல்வேறு துறைகள் இந்த ஆய்வை நடத்தும். அந்த இரு ஊர்களில் மனிதர்கள் தாங்கும் திறன், கட்டமைப்பு தாங்கும் திறன் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு இந்த ஆய்வுக்குச் சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் தேர்வு செய்யப்பட்டன. ஆய்வு நடத்தச் சென்னை ஐஐடி ரூ.2.09 கோடியும், பெங்களூர் ஐஐஎம் ரூ.1.51 கோடியும் நிதி கோரின. இரு நிறுவனங்களின் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு இரு தரப்புக்கும் அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்கியுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எது தொடர்பாக ஆய்வு: இந்த ஆய்வுகள் வரும் 2025 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து குறிப்பிட்ட கால அளவுக்குள் முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் நிலையில், அதற்குள் தாங்கும் திறன் குறித்த முதற்கட்ட தகவலை அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications