பாட்டிலுக்கு 10 ரூபா.. குவாட்டரும் கையுமாக அலைய போகும் குடிகாரர்கள்! தமிழகம் முழுவதும் வரும் திட்டம்
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் உறுதி அளித்துள்ள நிலையில், வழக்கு பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மதுபான பாட்டில்கள் சாலையோரம் மற்றும் வனப்பகுதிகளில் வீசப்படுவதால் வனவிலங்குகள் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிகப்படுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி பாட்டிலை திரும்ப வழங்கும் போது அந்த ரூ.10-ஐ மீண்டும் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
மேலும், இந்த திட்டத்தை மலைப்பகுதிகளில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தமிழக அரசின் சார்பில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதில், தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று மாவட்டங்களில் பாதி அளவிற்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏழு மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார். அதேபோல், டாஸ்மாக் கடைகளில் கியூஆர் கோடு முறையை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் அளவுக்கு நடைபெறும் நிலையில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் இனி கால அவகாசம் வழங்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications