அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே அமலாகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கைகளில் முக்கியமான மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்ய அனுமதித்து பணப்பலன் வழங்க வேண்டும் என்பதுதான்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதன்படி 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன்களை பெறலாம்.
முன்னதாக கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈட்டிய விடுப்பு சரண் முறையை மீண்டும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110 இன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அப்போது முதல்வர் உரையில் 1 - 4 - 2026 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபயன் பெறலாம் என அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த நடைமுறையை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஈட்டிய விடுப்பு சரண் இந்த ஆண்டே வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே அமலாகிறது.












Click it and Unblock the Notifications