பரந்தூர் ஏர்போர்ட்.. ஸ்பெஷல் பிளானை கையில் எடுக்கும் தமிழக அரசு.. இந்த வேகத்துல போனா.. அடடே சூப்பர்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இடநெருக்கடியைச் சமாளிக்க பரந்தூரில் ஏர்போர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானத்தைத் தொடங்க தேவையான அனுமதிகளைப் பெறும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அனுமதிகள் விரைவாகக் கிடைத்தால் தான் கட்டுமானத்தை முடித்துத் திட்டமிட்டபடி 2028இல் பரந்தூர் ஏர்போர்ட்டை திறக்க முடியும்.
இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான ஏர்போர்ட்களில் ஒன்றாகச் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட் இருக்கிறது. அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏர்போர்ட்: இருப்பினும், மீனம்பாக்கம் ஏர்போர்ட் நகருக்குள் அமைந்துள்ளதால் விரிவாக்கம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகப் போய்விட்டது. இதையடுத்து பரந்தூரில் 2ஆவது விமான நிலையத்தை அமைக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்தது. இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு, தமிழக அரசு விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகி இருக்கிறது. இருப்பினும், இதற்கான அனுமதி விரைவாகக் கிடைக்கவில்லை.
இதையடுத்து பரந்தூர் ஏர்போர்ட் கட்டுமானத்திற்கு இட அனுமதி கோரும் திட்டம், மத்திய அரசின் வழிகாட்டுதல் குழுவுக்கு இப்போது தான் சென்றுள்ளது. இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி பெற தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் பரந்தூர் ஏர்போர்ட் குறித்த பிளானை டிட்கோ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் உறுப்பினர்கள், உயர்மட்ட கமிட்டியிடம் விளக்கினர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "எங்கள் திட்டத்தை நாங்கள் விளக்கினோம். மத்திய அரசு அதிகாரிகள் திருப்தி அடைந்தனர்.. அடுத்த கட்டமாக அவர்கள் கட்டுமானத்திற்கு அனுமதி தர சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்வார்கள் என்றே நினைக்கிறோம்" என்றார்.
விரிவாக்கம்: சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இட நெருக்கடி மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மீனம்பாக்கம் நகருக்குள் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து நகருக்கு வெளியே சென்னைக்கு 2வது ஏர்போர்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எங்கே ஏர்போர்ட் அமைக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, டிட்கோ இந்த திட்டத்திற்கான விரிவான திட்டத்தை உருவாக்கியது. சுமார் ₹32,704.92 கோடி செலவில் நான்கு கட்டங்களாகக் கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம், சுமார் 10 கோடி பயணிகளைக் கையாள முடியும். மேலும், இந்த ஏர்போர்ட் இதில் மூன்று டெர்மினல்கள் கொண்டதாக இருக்கும்.
தள அனுமதி: இந்த ஏர்போர்ட் கட்டுமானத்திற்கான தள அனுமதிக்கான விண்ணப்பத்தைக் கடந்த 2023இல் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது. அப்போது பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எனப் பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து அந்த சந்தேகங்களைத் தமிழக அரசு தீர்த்தது. நீக்கியது.
அதிகாரிகள் மேலும் கூறுகையில், "தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவை தேவைப்படுகிறது. இந்த இரண்டு அனுமதிகளையும் சரியான நேரத்தில் பெற்றால், கட்டுமானத்தை விரைவாகத் தொடங்கி, திட்டமிட்டபடி முடிக்க முடியும்" என்றார்.
இந்த பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்திற்குக் கடந்த டிசம்பர் 2023இல், பாதுகாப்பு அமைச்சகத்தால் தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு, உள்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து உட்பட பல்வேறு அமைச்சகங்களின் அனுமதி ஏர்போர்ட் கட்டுமானத்திற்குத் தேவைப்படுகிறது.












Click it and Unblock the Notifications