வெள்ளியங்கிரி வனப்பகுதியை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை! RTI கேள்விக்கு தமிழக அரசு பதில்
சென்னை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதி ஆக்கிரமிப்பும் செய்துள்ளதா என்ற ஆர்டிஐ கேள்விக்குத் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.
ஜக்கி வாசுதேவால் தொடங்கப்பட்ட ஈஷா யோக மையம், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் மையங்களைக் கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்களிடையே யோகா பிரபலமாகி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் கூட பலரும் ஈஷா யோகா மையத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.

ஈஷா யோகா மையம்
நீலகிரி அருகே வெள்ளியங்கிரி அலை அடிவாரத்தில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். வனப்பகுதியின் அருகில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த யோகா மையம் அமைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பலர் இந்த மையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு இங்கு 112 அடி உயரம், 500 டன் எடை கொண்ட ஆதியோகி சிலை திறக்கப்பட்டது.

குற்றச்சாட்டு
ஆண்டுதோறும் இங்கு தான் சிவ ராத்திரி வெகு விமர்சியாகக் கொண்டாடப்படும். அப்போது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அங்குச் செல்வது வழக்கம். அதேநேரம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஈஷா யோகா மையம், காட்டுப் பகுதிகளையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாகவே பரவலாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், இதனை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மறுத்தே வருகிறது.

தமிழக அரசு பதில்
இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தமிழக அரசு அளித்துள்ள பதில்களை CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை & ஈஷா யோகா மையம் வனப்பகுதிகள் எதையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இல்லை
அதேபோல ஈஷா யோகா மைய கட்டுமானத்திற்காக வனப் பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஈஷா யோகா மையம் அமைந்துள்ள இடத்தில் யானைகள் வழித்தடம் எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு ஆர்டிஐ கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளது. பல ஆண்டுகளாகக் காட்டுப் பகுதிகளையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்து ஈஷா மையம் கட்டுப்பட்டதாகப் புகார்கள் இருந்த நிலையில், தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications