குஜராத் அமுல் வருதுன்னு எதிர்த்தீங்களே..கர்நாடகா 'நந்தினி' வருதே.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் கர்நாடகாவின் 'நந்தினி' பால் நிறுவனம் வருகையால் ஆவின் நிறுவனம் நட்டமடையக் கூடும்'; இதனால் நந்தினி பால் நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் குஜராத்தின் அமுல் நிறுவனம் கால் பதிக்க முனைந்தது. இது தமிழ்நாட்டின் ஆவின் பால் நிறுவனத்தை நிர்மூலமாக்கும் சதி என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981 ஆம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அமுல் நிறுவனமோ எல்லை தாண்டிய கொள்முதலில் ஈடுபடுவதால் 'வெண்மை புரட்சி' என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆகையால் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அமுல் தமிழகத்தில் நுழைகிறது என்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர், கர்நாடகாவின் நந்தினி தமிழ்நாட்டிற்குள் சத்தம் இல்லாமல் நுழைய முற்பட்டுள்ளதை முதல்வர் அறிந்திருப்பார் என நினைக்கிறேன். நந்தினியின் வருகையால் ஆவின் நஷ்டப்பட வாய்ப்புள்ளது. காவிரி விவாகரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக மௌனமாக இருந்தது போல் அல்லாமல், கர்நாடக அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் நந்தினி வருகை எதிர்த்து கடிதம் எழுத வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications