மணிப்பூர் தமிழர்கள் நிலைமை அறிய தமிழ்நாடு அரசு குழு செல்கிறது? மாநில அரசுடன் பேச்சுவார்த்தை?
சென்னை: இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் வசிக்கும் தமிழர்கள் நிலைமை குறித்து அறிய தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அம்மாநிலத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக இன மோதல்கள் நீடித்து வருகின்றன. மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான இந்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் இந்த வன்முறையின் கோரமுகம் முழுமையாக வெளிப்படவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் குக்கி இனக்குழு பெண்களுக்கு எதிராக மைத்தேயி இனக்குழுவினர் கொடூரமாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைக்கின்றன. பெண்கள் கூட்டு பலாத்காரம், பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலம், பெண்கள் உயிரோடு எரிப்பு என மிக மோசமான வன்முறைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மணிப்பூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். மணிப்பூரில் பணி மற்றும் கல்விக்காக சென்ற தமிழர்கள் ஒரு பக்கம்- மணிப்பூரின் மோரே நகரில் (மியான்மர் எல்லையில்) 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 4,000 தமிழர்கள் இன்னொரு பக்கம் என உள்ளனர். மோரே நகரில் குக்கி- மைத்தேயி இனக்குழு மோதலில் தமிழர்களும் சிக்கிக் கொண்டனர். 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு மோரே நகரில் மிக மோசமான வன்முறை வெடித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்திருந்தனர். இதனால் மோரே தமிழர்கள் தற்போதும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் நேரில் சந்தித்தும் உரையாடியிருந்தார்.
இந்நிலையில் மணிப்பூர் தமிழர்கள் நிலைமை குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் தலைமையில் அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்நிலை குழு ஒன்று விரைவில் அம்மாநிலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மணிப்பூர் தமிழர் நிலைமை தொடர்பாக அம்மாநில அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications