பிரபல கோயில் ஆவணங்களில் சாதியின் பெயரை சேர்த்த தமிழக அரசு உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் பெயரில் உள்ள ஆவணங்களில், சாதியின் பெயரை சேர்த்த அரசு உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் என்கிற ஊரில் சோழீஸ்வரர் கோவில், அழகுராய பெருமாள் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில் ஆகியவை ராஜேந்திர சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோவிலின் அறங்காவலர்களாக வெவ்வேறு சாதிகளை சேர்ந்த மூவரை அறங்காவலர்களாக மட்டுமே 1974ல் நியமிக்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இந்த கோவில்கள் உள்ள நிலையில், அவற்றின் சில சொத்துக்களில் கோவிலின் பெயருக்கு முன் குறிப்பிட்ட சாதியின் பெயரை சேர்த்து அரசு ஆவணங்களில் திருத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கோவிலின் சொத்து ஆவணங்களில் கோவிலின் பெயருக்கு முன்னால், விழியன்குல கொங்குநாட்டு வெள்ளாளர் என சேர்த்து 1997ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தமிழக செட்டில்மெண்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கோவிலின் பெயரில் மட்டும் ஆவணங்களை மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவிலை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே அறங்காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, அறங்காவலர் என்கிற பெயரில் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது "பொதுக் கோவில்" என்கிற தன்மையை மாற்ற முடியாது என தெளிவுபடுத்தியதுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, தற்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் பெயருக்கு முன்னால், குறிப்பிட்ட சாதிப் பெயரை சேர்ப்பது என்பது, தவறாக புரிந்துகொள்ளும் சூழலை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கோவிலின் சொத்து ஆவணங்களில் அதன் பெயருக்கு முன்னால் உள்ள சாதிப் பெயரை சேர்த்த செட்டில்மெண்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, சொத்து ஆவணங்களில் கோவில் பெயர் மட்டுமே இடம்பெறும் வகையிலான நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications