உலகிலேயே தமிழகம் முதலிடம்.. இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்
சென்னை: இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பட்டியல் போட்டு பேசினார்.
சென்னையில் சுகாதார மாநாடு 2022 இன்று துவங்கியது. இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:

இருகண்கள்
அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைகிற வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை தமிழ்நாடு பெற வேண்டும் என்பதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். அதில் நமது கவனத்தை பெற்றுள்ள முதன்மையான துறை எது என்று சொன்னால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தான். கல்வி மற்றும் மருத்துவம் இரு கண்கள் என நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத்துறை நல்ல துறையாக இன்றைக்கு செயல்பட்டு வருகிறது.

மகிழ்ச்சி
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாட்டை சீரமைப்பதற்காக முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரசின் நோக்கத்தை முழுமைப்படுத்த இந்த மாநாடு உதவிக்கரமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஊரக பகுதிகளில் குக்கிராமங்களில் வசிக்க கூடிய ஏழை, எளிய மக்களின் நோய்களை துவக்க நிலையிலேயே கண்டறிந்து அவற்றுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதை நமது அரசின் குறிக்கோள்.

திருவள்ளூர் வழியில் அரசு
இதைத்தான் திருவள்ளூர் ‛‛நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என குறிப்பிட்டுள்ளார். வள்ளூர் வலியுறுத்திய குறிக்கோளோடு நமது அரசு செயல்பட்டு வருகிறது. கருணாநிதியால் ஏழை எளிய மக்களுக்காக கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்றவை நாட்டின் முன்னோடி திட்டங்களாக கொண்டு வரப்பட்டு இன்றளவும் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டால் தேசிய அளவிலும், நாட்டின் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கருணாநிதியின் பாதையில் தான் நமது அரசின் நல்வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1 கோடி என்ற சாதனை
ஏழை எளிய மக்கள் வாழும் இடங்களுக்கு சென்று மருத்துவம் வழங்கிட மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை விரைவில் 1 கோடி என்ற அளவை அடைய உள்ளது. சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பை குறைப்பதற்கும் பொன்னான நேரம் எனும் கோல்டன் ஹவர்ஸ் திட்டத்தில் முதல் 48 மணிநேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ரூ.1 லட்சம் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இந்த 3 திட்டங்களும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இதனை நான் பெருமையாகவே சொல்கிறேன்.

மிக உயர்ந்த குறியீடுகள்
அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு, மருத்துவ சாதனகள் போன்றவை மாநில நிதியில் இருந்தும், தேசிய நலவாழ்வு நிதியில் இருந்தும் வழங்கப்பட்டு வளப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பர சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தணிக்கை செய்து நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்து தட்டுப்பாடு உள்ளதா? என்பன போன்ற குறைகளை ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காண வேண்டும். மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் மிக உயர்ந்த குறியீடுகளை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம்.

முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பிரசவங்கள் 100 சதவீதம் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழகம் அடைந்துள்ளது. தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வில் உலகளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

புதுபுது வடிவத்தில் நோய்
இதேபோல் மருத்துவ வளர்ச்சி அனைத்திலும் முன்னிலை பெற முறையான திட்டமிடல் வேண்டும். சுகாதார குறியீடுகளை வைத்து மருத்துவமனைகளை தரவரிசை செய்கிறார்கள். இந்த தரிவரிசையில் பின்தங்கியுள்ள மருத்துவமனைகளை முன்னுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு உள்கட்டமைப்புகளை மட்டும் சீர்செய்தால் போதாது. மருத்துவ துறை, மருத்துவ முறையை நவீனமயமாக்க வேண்டும். சிகிச்சை முறையை நவீனப்படுத்த வேண்டும். நோய்கள் புதுப்புது வடிவங்களில் வருகிறது; அதனை வெல்லும் முறைகளும் பலமுனை கொண்டதாக மாற வேண்டும். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவை பெரிய குறைபாடாக அனைத்து மருத்துவர்களும் சொல்ல தொடங்கி உள்ளனர். அப்படியானால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவை போக்க அரசின் சார்பில் என்ன மாதிரியான திட்டங்களை எடுக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும். நோயை குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடுவது இல்லை. அதனை தாண்டியும் பல்வேறு விஷயங்கள் உள்ளன. அதுபற்றியும் நாம் ஆராய வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications