பயமுறுத்தும் பருவமழை.. உங்கள் வீட்டில் கர்ப்பிணிகள் இருக்காங்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
17ஆம் தேதியான நாளை வரை சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே சில இடங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் நிலையில், மேலும் மழை பெய்தால் நிலைமை மோசமடையும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், நேற்றும், நேற்று முன் தினமும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே சென்னையில் கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனமழையை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், கனமழை தாக்கத்தை எதிர்கொண்டுள்ள பகுதிகளில் ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில், பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், அவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," பருவகால மழை மற்றும் புயலின் காரணமாக வெள்ளம் ஏற்படும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணித்தாய்மார்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிரசவம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வானிலை ஆய்வு மையத்தால் "ரெட் அலர்ட்" அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும், முன்கூட்டியே பாதுகாப்பு கருதி, ஆரம்ப சுகாதார நிலையங்கள். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பிரசவ தேதி ஒரு வாரத்திற்குள் உள்ள கர்ப்பிணிகள் குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் மழையினால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள பகுதிகளில் உள்ளவர்களும், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்கும்பொருட்டும், இந்த ஏற்பாட்டினை உடனடியாக மேற்கொள்ள இதன் மூலம் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் வேண்டி கொள்ளப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணிகள் வீட்டில் இருந்தாலோ, அல்லது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலோ 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவி எண்களை அழைக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications