50 ஆண்டுகளுக்கு முன் திருவாரூரில் திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.. மீட்க தீவிரம்!
சென்னை: 50 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு பழங்கால சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக் காலமாக தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த கோயில் சிலைகளை கடத்தப்படுவது அதிகரித்து வந்தது. இதனால் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோயில்களை கண்டுபிடிக்கவும், அதனை மீட்டு மீண்டும் தமிழ்நாடு கோயில்களுக்கு கொண்டு வரவும் தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்ற தனிப் பிரிவையே உருவாக்கியது.

அந்த வகையில் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகம் மற்றும் இணையதள காட்சிகளிலும் வைக்கப்பட்ட சிலைகளை தொடர்ந்து மீட்டெடுக்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் சோமாஸ்கந்தர் மற்றும் நடன சம்பந்தர் ஆகியோரின் வெண்கல சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் வெண்கல சிலைகள் திருடப்பட்டதாக கோயில் நிர்வாகத்தால் புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, திருடப்பட்ட இக்கோயிலில் உள்ள பழங்கால உலோகச் சிலைகளை மீட்டு, பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால் கோயில் நிர்வாகிகளிடம் சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் இல்லாததால், பிரெஞ்சு - புதுச்சேரி நிறுவனத்திடம் சிலைகளின் புகைப்படங்களை கோரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். இதன் பின்னர் விஸ்வநாத கோயில் தொடர்புடைய சிலைகளின் புகைப்படங்களை அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது.
கோயிலில் இருந்த சிலைகளின் புகைப்படங்களைப் பெற்று, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்கள், தனியார் சேகரிப்பாளர்களின், சிற்றேடுகளில் சிலைகளை தேட குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, ப்ரீயர் சாக்லர் மியூசியத்தில் சோமாஸ்கந்தர் சிலைகளையும், கிறிஸ்டிஸ் டாட் காம் என்ற இணையதளத்தில், நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதும் தெரியவந்தது.
இதனை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அசல் சிலைகள்தான் என்று முழுமையான ஆய்வுக்குப் பிறகு நிபுணர்கள் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து சிலைகளை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடங்கினர்.
அதன் முதற்கட்டமாக சிலைகளின் உரிமையை நிரூபிக்கும் வகையில், சிலைகளின் ஆவணங்களை தயாரித்து சிலைகளை அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதேபோல் அமெரிக்காவின் ஏல மையங்களில் உள்ள இரு சிலைகளுக்கு உரிமை கோரி சிலை கடத்தல்தடுப்பு பிரிவு கடிதம் எழுதியுள்ளது. அதனால் அந்த இரு சிலைகளும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications