"பிக் டிக்கெட்".. 5 மாநிலங்களை வீழ்த்தி.. மாபெரும் ஓலா முதலீட்டை வென்ற தமிழ்நாடு.. சாதித்தது எப்படி?
தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாநிலங்களின் போட்டிக்கு இடையே இந்த ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு தட்டி தூக்கி உள்ளது.
தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது.

எங்கே
இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற 5 மாநிலங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த 5 மாநிலங்களை வீழ்த்தி தமிழ்நாடு இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது.

என்ன காரணம்?
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஓலா நிறுவனம் முதலீடு செய்தது எப்படி என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் வெளியிட்டு உள்ளார். அதில் ஓலா நிறுவனத்திற்கு தமிழ்நாடு வழங்கிய சலுகைகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார். ஓலா நிறுவனத்திற்கு முதலீட்டு தொகையை தேர்வு செய்யும் சுதந்திரம் வழங்கியது. அதேபோல் மொத்த வருமானத்தில் சலுகைகள் வழங்கியது. நிலத்திற்கான சலுகை விலையை குறிப்பிட்டது. மின்சார கட்டணத்தில் சலுகைகள் கொடுத்தது என்று பல விஷயங்கள் தமிழ்நாடு இந்த முதலீட்டை பெற காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

வேறு சலுகைகள்
தமிழ்நாடு அரசு சமீபத்தில் தனது மின்னணு வாகனங்களின் கொள்கையை மாற்றியது. மக்கள் அதிக அளவில் மின்னணு வாகனங்களை வாங்கி வைக்கும் விதமாக கொள்கைகளை மாற்றியது. இதுதான் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக திரும்பி உள்ளது. இந்த ஓலா நிறுவனத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது, முதலீட்டிற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவது போன்ற கொள்கைகளை தமிழ்நாடு அரசு வகுத்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த மின்னணு வாகனங்களை வாங்க 10 லட்சம் ரூபாய் வரை சலுகைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

சலுகை
இந்த புதிய கொள்கைதான் தமிழ்நாட்டில் ஓலா போன்ற நிறுவனங்களின் முதலீடு குவிய காரணமாக அமைந்து உள்ளது. முக்கியமாக பெங்களூரில் ஓலா ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்குதான் ஓலா நிறுவனத்தின் Lithium ion cell NMC-2170 உருவாக்கப்பட்டது. ஆனால் அதை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டை ஓலா நிறுவனம் அணுகி உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.

நிலம்
இந்த அமைப்பு மூலம் முதலீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். இன்னொரு பக்கம் பெங்களூரை விட கிருஷ்ணகிரியில் நிலம் விலை குறைவு. தமிழ்நாடு அரசும் பல்வேறு ஆபர்களை வழங்கி வருகிறது. அரசியல், சமூக சூழ்நிலை தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கிறது என்பதும் முதலீடுகள் இங்கே வர காரணமாக மாறி உள்ளது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் தமிழ்நாடு இது தொடர்பான முதலீடுகளை ஈர்க்கிறது.












Click it and Unblock the Notifications