கர்நாடகாவை காலி செய்து தமிழ்நாடு No 1 … 2 வருடங்களில் 223% வளர்ச்சி.. தட்டி தூக்கிய ஸ்டாலின்
சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்பதுதான் 'கரென்ட்' நியூஸ். அதாவது ஏற்றுமதியின் மதிப்பு 5.37 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் குறிப்பிட்டால், சுமார் 44.044 கோடி. இது ஏறக்குறைய 22.83% வளர்ச்சி. கடந்த 2 ஆண்டுகளில் 233% வளர்ச்சி.
கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இந்திய அளவில் 4வது இடத்திலிருந்த தமிழ்நாடு, ஒரே வருடத்தில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதில் வியப்பு என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு மின்னணு ஏற்றுமதியில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இரண்டாவது இடத்தில் நம்மைவிடப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம் உள்ளது. 3வது இடத்தில் கர்நாடகா. நான்கில் மகாராஷ்டிரா. 5வது இடத்தில் குஜராத்தும் 6வது இடத்தில் டெல்லியும் உள்ளன.
அதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, பாஜக ஆளும் மாநிலங்களைவிடத் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதைத்தான்.

இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதிகமாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் தொழில்துறை சார்ந்தவைதான். அதை அவரே பலமுறை குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.
இந்தச் சாதனைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் அவரது ட்விட்டரில், "இந்த சாதனை நமது #திராவிட மாதிரி ஆட்சிக்கு ஒரு சிறிய உதாரணம். முதலீட்டாளர்களுக்கான முதல் துறைமுகமாகத் தமிழகத்தை நிலைநிறுத்தவும், தெற்காசியாவின் முதலீட்டு மையமாகத் தமிழ்நாட்டை மாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம். அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த வளர்ச்சி மகிழ்ச்சிக்குரியது. இந்த முதலிடம் எப்படிக் கிடைத்தது? அதற்காக சில நிபுணர்களிடம் பேசினோம்.
பொருளாதார நிபுணர் ரெஜி தாமஸ், "இந்தியாவில் 25 பில்லியன் டாலர் ஏற்றுமதியில், தமிழ்நாடு 22.83% அளவுக்குப் பங்களிப்பு செய்துள்ளது என்பது மாபெரும் சாதனைதான். இதற்கான காரணங்கள் சிலவற்றை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முதலில் அரசின் நடவடிக்கைகள் மிகப் பெரிய காரணம். அடுத்து நம் மாநிலத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஏறக்குறைய தமிழ்நாடு தலைநகரமாகவே விளங்கிவருகிறது.

கர்நாடகாவை பின் தள்ளி தமிழ்நாடு முதலிடத்திற்கு வந்திருக்கிறது என நினைக்கும்போது எனக்குச் சந்தோஷமாகவே உள்ளது. காரணம், தமிழ்நாட்டில் 'எலெக்ட்ரானிக் சிட்டி' என ஒன்று இல்லை. ஆனால், பெங்களூருவில் இருக்கிறது. அப்படி உள்ள மாநிலத்தைப் பின்தள்ளி நாம் முன்னேறி இருக்கிறோம் என்பது மிகமிக சிறப்பான விஷயம்.
வெறுமனே ஒரு நகரத்தை ஏற்படுத்திவிடுவதால் மட்டும், ஒரு மாநிலம் முதலிடத்திற்கு வந்துவிட முடியாது. அதைத் தமிழ்நாடு நிரூபித்துக் காட்டி இருக்கிறது. ஒரு தமிழனாக அது நமக்குப் பெருமை" என்கிறார்

அடுத்துப் பேசியவர் தனியார் மின்னணு நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார். அவர் என்ன சொல்கிறார்? "நமது மாநிலத்தில் தொழிற்கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அப்படிப் பார்த்தால் நம் மாநிலத்தில் தொழிலாளர்களின் தட்டுப்பாடு என்பது அதிக அளவில் இல்லை. அது மிகமிக முக்கியமான காரணம்.
நாட்டில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது என்றால், அதை உடனடியாகக் கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் நமது அரசு செய்து தந்துவிடுகிறது. இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது... அதைக்கூட அரசு மானியத்துடன் செய்து கொடுப்பதால், தொழில்முனைவோர் பொருளாதார நெருக்கடி இல்லாமல் அந்த சாதனங்களைப் பெற்றுவிடுகிறார்கள் என்பதுதான்.

அதைக் கடந்து வங்கிக் கடன் என்பது மிக விரைவாகக் கிடைக்கிறது. அதற்கு அரசும் உதவி செய்கிறது. இப்படியான சாதகமான பல அம்சங்கள்தான் தமிழ்நாட்டில் மின்னணு ஏற்றுமதியை உயர்த்தியுள்ளது. அதேவேளையில் மின்னணு உற்பத்தி பொருள்களுக்குச் சந்தையில் தேவையும் அதிகமாகவே உள்ளது. அதன் வளர்ச்சியும் நல்ல விதமாகவே இருந்துவருகிறது.
இன்றைய மதிப்பீட்டில் உள்ள 44 ஆயிரம் கோடி என்பது வருகின்ற 3 ஆண்டுகளில் 1 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும் என்பது என் கணிப்பு. அதற்கான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது.

அவர்கள் 1 டிரிலியன் டாலர் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆகவே, இந்தத் திட்டமிடலானது பல துறைகளைத் தானாக வளர்ச்சியடையச் செய்துவிடும்" என்கிறார்.
அவரிடம் 1 லட்சம் கோடி என்பது கொஞ்சம் அதீத எதிர்பார்ப்பாக இல்லையா? எனக் கேட்டோம். அதற்கு அவர், "கடந்த 2 வருடங்களில் 233% வளர்ந்துள்ளது என்பதை வைத்துக் கணிக்கும்போது, வரும் 3 ஆண்டுகளில் நிச்சயம் 1 லட்சம் கோடி என்ற இலக்கை நிச்சயம் நாம் எட்ட முடியும்.

மின்னணு பொருள்களுக்கு உலக சந்தையில் அதிக தேவை இருக்கிறது. அதைவைத்துத்தான் நான் இந்தக் கணிப்பை முன்வைக்கிறேன்" என்கிறார்.
கடைசியாகப் பேசிய திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி, "இன்றைய கணக்கீட்டில் தமிழ்நாட்டில் ஜிடிபி என்பது 18 லட்சம் கோடியாக உள்ளது. இதைத்தான் 1 டிரிலியன் டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்தப்போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இன்றைய டாலர் மதிப்பைக் கொண்டு மதிப்பிட்டால், ஏறக்குறைய 80 லட்சம் கோடி. அப்படியென்றால் ஏறக்குறைய 4 மடங்குக்கு மேல் நமது பொருளாதாரத்தை 2030க்குள் உயர்த்த வேண்டும். அந்த டாஸ்க்கை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். பொருளாதாரத்தை உயர்த்துவதாக அவர் வெறுமனே அறிவிக்கவில்லை. அதற்கு உண்டான வேலைகளை எதை எல்லாம் செய்யவேண்டுமோ அதை எல்லாம் செய்தார்.
இன்றைக்கு புதியதாகத் தொழில் தொடங்குபவர்கள் விரும்பக்கூடிய மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. ஏஞ்சல் முதலீட்டில் நாம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். இந்திய அளவில் தமிழ்நாடு மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலமாக இருந்துவருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் துறையில் பேராசிரியர் மீனாட்சி, "இன்றைக்கு எலெக்ட்ரானிக்ஸ் என்பதை வெறுமனே அந்த ஒரு துறை சார்ந்த விஷயமாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. மருத்துவ அறுவைச் சிகிச்சை துறையில்கூட இன்று எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பங்களிப்பு என்பது வந்துவிட்டது.
இனி வரப் போகின்ற 5ஜி தொழில்நுட்பம் இன்னும் இந்த சந்தையை விரிவடையச் செய்ய உள்ளது. நாளைய கல்விகற்றல் முறை என்பதே எலெக்ட்ரானிக்ஸ் மூலம்தான் நடக்கப் போகிறது.
மக்கள் வரும் காலங்களில் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைக் கொண்டே தங்களின் உயர்கல்வியை எந்தநாட்டிலிருந்தும் பெற முடியும். ஆக, இந்தத் துறைதான் வரும்காலங்களில் உலகைக் கட்டி ஆளப் போகின்றது. அதில், இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனால், வரும்காலங்களில் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் அதிக கவனத்தைச் செலுத்துவார்கள். அதன்மூலம் நமது மனித ஆற்றல் இந்தத்துறையில் இன்னும் பெருகும்" என்கிறார்.
மனித ஆற்றல் பெருகும்போது அது பணத்தையும் பெருக்கும் என்பதுதானே உண்மை!












Click it and Unblock the Notifications