தொழில்முதலீடுக்கு நாட்டிலேயே தமிழ்நாடுதான் பெஸ்ட்! ஏப்ரல்-டிசம்பர் வரை அதிக முதலீடுகளை ஈர்த்து சாதனை
சென்னை: நடப்பு நிதியாண்டில் அதிக முதலீட்டார்களை ஈர்த்த மாநிலமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
Recommended Video

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டிலேயே முதலீட்டுக்கான மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் முதலீட்டின் அடிப்படையில் தமிழகம் அதிக லாபம் ஈட்டியிருக்கிறது.
ப்ராஜெக்ட்ஸ் டுடே என்ற அமைப்பு அதிக முதலீட்டாளர்களை ஈர்த்த மாநிலங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் நிகர லாபம் ரூ.36292 கோடியாக இருந்தது. அது தற்போது ரூ 1,43,902 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே வருடத்தில் தமிழகத்தின் நிகர லாபம் 1,07,610 கோடியாக அதிகரித்துள்ளது.
அதிக முதலீடுகளை பெற்றதாக குஜராத் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் மாநிலத்துக்கு ரூ. 77,892 கோடி நிகர லாபம் இந்த ஒன்பது மாதங்களில் கிடைத்திருக்கிறது. தெலுங்கானா மூன்றாவது இடத்தையும் (₹65,288 கோடி) பெற்றுள்ளது என ப்ராஜெக்ட்ஸ் டுடே அறிக்கை கூறுகிறது.

தனித்திறன்
நிறுவனங்களுக்கு இருக்கும் சிக்கலை அறிந்து அதற்கு தகுந்தமாதிரி பிரச்சனையை முடிக்கும் திறன் இருந்ததால், தமிழகத்துக்கு நிறைய முதலீட்டாளர்கள் கிடைத்தார்கள். இது நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த கருத்து என்கிறார் தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன். பொது முடக்கத்தாலும் கொரோனாவாலும் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகளால் பொருளாதாரம் மாறுகிறது. சரியான திட்டமிடல் மற்றும் சீக்கிரமாக எடுக்கும் முடிவுகளால் தமிழகத்தை நோக்கி நிறைய முதலீட்டாளர்கள் வருகிறார்கள்.

திமுக ஆட்சி
திமுக கடந்த மே மாதம் தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. தொழில்துறைக்கு தங்கம் தென்னரசு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு திமுக தொழில் துறையில் நிறைய முன்னெடுப்புகளைக் கொண்டு வந்தது. குறிப்பாக திமுக வந்ததும் ஃபின்டெக் உள்ளிட்ட தொடர் கொள்கைகளை வெளியிட்டது. மேலும் முதலீட்டாளர்களைக் கவர MSME மற்றும் தகவல் தரவுகளையும் வெளியிட்டது.

முதலீட்டாளர்கள் கருத்து
''தொற்றுநோய் இருந்தபோதிலும், தொழில் செய்வதற்கான சூழ்நிலையய் அரசு ஏற்படுத்தியது. பயோடெக்னாலஜி, மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் எளிதாக தொழில் முயற்சிகளை மாநில அரசு தொடர வேண்டும்'' என காவேரி மருத்துவமனையின் நிறுவனர் தலைவர் எஸ்.சந்திர குமார் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை
''அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு, தற்போதைய அரசாங்கத்தின் மீது உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையைத் தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் அதிகாரத்துவத் தலைமை மிகவும் வலிமையானது மற்றும் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மரபு எப்போதும் உள்ளது'' என கவின்கேர் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் கூறியுள்ளார்.

குஜராத்
இந்தியா முழுவதும், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்தம் ₹12,76,679 கோடி முதலீட்டில் 7,764 புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
முதலீட்டாளர்கள் வாயிலாக அதிக லாபம் கொண்டுவந்ததில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அதேசமயம், குஜராத் 1,77,007 கோடி ரூபாயில் 22 தனியார் திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. மேலும் 2,31,315.7 கோடி ரூபாய் மதிப்பிலான 943 புதிய திட்டங்களுடன் மாநில தரவரிசை அட்டவணையில் குஜராத் முதலிடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 1129 திட்டங்களை 1,51,130.28 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால் அதிக திட்டங்களின் அடிப்படையில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேநேரம், தமிழ்நாடு ரூபாய் 1,43,901.84 கோடி மதிப்பிலான 304 திட்டங்களையும் கொண்டுவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications