போலி போட்டோஷூட் அப்பா.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது! எடப்பாடி பழனிசாமி தாக்கு
சென்னை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்ட ஒழுங்கை பாதுகாப்பதை விட்டுவிட்டு திமுக அரசு மக்களுக்குத் துளியும் சம்பந்தமில்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்துவதாகச் சாடியுள்ளார். மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்யக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், இப்போது முதலே அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு
குறிப்பாகச் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இது தொடர்பாகக் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாகக் கூறியுள்ள அவர், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள் எனக் கூறி சில சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு சட்ட ஒழுங்கை பாதுகாக்க மறுத்துவிட்டு, பொதுமக்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை முன்னிலைப்படுத்துவதாகச் சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள்.. செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பச்சிளம் குழந்தையான 5 வயது சிறுமிக்கு கூட பாலியல் தொல்லை.. பவானி அருகே சிறுமிக்கு பட்டறை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை.. பரமக்குடியில் பட்டப்பகலில், நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் ஆசிரியைக்கு 25 இடத்தில் கொடூரமான முறையில் கத்திக்குத்து..
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி என்பது யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லாத ஆட்சி என்பதே நாள்தோறும் வரும் செய்திகள் சொல்லும் உண்மை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காப்பதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது.
போலி போட்டோஷூட்
நாள்தோறும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஸ்டாலின், மக்களுக்கு துளியும் சம்மந்தமில்லாத விஷயங்களை முன்னிலை படுத்தி, இதுபோன்ற சம்பவங்களை கடந்துவிட முனைவது, தமிழ்நாட்டின் மகளிருக்கு இழைக்கின்ற மன்னிக்கமுடியாத துரோகம்! இது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய அந்த இரும்புக்கரத்தின் துருவைத் துடைத்தெறிந்து செயல்படுமாறு "போலி போட்டோஷூட் அப்பா"வை வலியுறுத்துகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications