தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம்தான் டாப்- தோல் அல்லாத காலணி தயாரிப்பு கம்பெனிகளும் படையெடுப்பு!
சென்னை: தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களான Nike, Crocs, Puma and Adidas உள்ளிட்டவைகளை தமிழ்நாட்டின் மீது 'படையெடுக்க வைத்துள்ளது' தமிழ்நாடு அரசு என்பது மிகையல்ல.
2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அதில், தேசிய அளவிலும் உலக அளவிலும் காலணித் தொழிலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது, தேசிய உற்பத்தி உற்பத்தியில் 26% மற்றும் தேசிய ஏற்றுமதியில் 48% ஆகும். ஆசியாவிலேயே காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கு மிகவும் விருப்பமான இடமாக தமிழகத்தை மாற்றுவது, பாதணிகள் உற்பத்திக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் இந்தக் கொள்கையின் நோக்கமாகும். காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பில் ரூ.20,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், காலணி பிரிவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைகளை ஈர்ப்பதற்காகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் போட்டிருக்கிறது.
கடந்த 2023-ல் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், தைவானின் டீன் ஷூஸ் நிறுவனம்- அரியலூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய உற்பத்தி பிரிவை தொடங்கியது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 1,000 கோடி முதலீட்டில் அமையும் இந்த தொழிற்சாலையால் அரியலூர் மாவட்டத்தில் 50,000பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் பெரம்பலூரில் ஏற்கனவே ரூ2,500 கோடி முதலீட்டில் குரூக்ஸ் காலணி தொழிற்சாலையை பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இதன் 2-வது கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமையும். இந்த தொழிற்சாலை மூலம் 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் மதுரை மாவட்டம் மேலூரில் 10 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கடலூரிலும் இரு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
சர்வதேச அளவில் தோல் அல்லாத பிற பொருட்களில் உருவாக்கப்பட்ட காலணிகளின் பயன்பாடு 86% ஆக உள்ளது. தமிழ்நாடு அரசுடன் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 38%; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 47% எனவும் பாராட்டு தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு அரசானது, தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் Nike, Crocs, Puma and Adidas என உலகின் முன்னணி நிறுவனங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்துள்ளது. அதாவது மொத்தம் ரூ.17,550 கோடி இந்த துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,30,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் இந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications