இது கூட தெரியல..அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் வேலை பார்த்தார் என வியப்பாக இருக்கிறது..திமுக எம்.பி. கிண்டல்
சென்னை: இது கூட தெரியலையே, அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் வேலை பார்த்தால் என்பது வியப்பாக உள்ளதாக திமுக எம்பி செந்தில்குமார் கிண்டல் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தல் எந்தவித தடையும் இன்று நல்லபடியாக நடந்து முடிந்ததாக திமுக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கோவை, நெல்லை, திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக வீடியோக்கள் தொகுப்புடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர் கே அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார்

உள்ளாட்சி தேர்தல்
அந்த புகாரில் எந்த வித தடையும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்ததாக திமுக அரசு சொல்கிறது. நான் இணைத்துள்ள இந்த வீடியோக்கள் மூலம் தமிழக அரசு தனது அதிகாரத்தை எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளது, எத்தனை மோசடிகளில் ஈடுபட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வாக்கு எண்ணிக்கை
வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் அத்துமீறல்கள், மோசடிகள் நடைபெறும் வரை இந்திய தேர்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்காது என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

தேர்தல் ஆணையம் பதில்
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட ட்வீட்டில் கூறுகையில் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தாது. இவற்றை விதி எண் 243 கே மற்றும் 243 இசட் ஏ- யின் படி மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. எனவே உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளது.

விதிகள் இணைப்பு
அதிலும் உங்களுக்கு தெரியுமா என தேர்தல் ஆணைய பக்கத்திலிருந்து ஒரு தகவலையும் எடுத்து போட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 324 இன்படி குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தலை கண்காணிப்பது, தேர்தலை நடத்துவது, கட்டுப்படுத்துவது, வழிகாட்டுவது உள்ளிட்டவைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்யும். உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வராது என குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக எம்பி செந்தில் குமார் கிண்டல்
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையை சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்பி செந்தில் குமாரும் கிண்டல் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கூறுகையில், அண்ணாமலை Sir உங்களுக்கு ஒரு Post 📩
from Election Comission of India. இந்த அழகுல தமிழக பாஜக தலைவர் civil service எழுதி IPS officer ஆக எப்படி பணி புரிந்திருப்பார் என்று வியந்து பார்க்க வேண்டும் என அந்த ட்வீட்டில் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications