முழு லாக்டவுன்: இன்று இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை என்னென்ன கட்டுப்பாடுகள் - எவை இயங்கும்
நாளை 24 மணி நேர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணிவரைக்கும் முழு ஊரடங்கு அமலாகிறது. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. அவசியமின்றி வெளியே சுற்றுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கித்தவித்து வருகிறது தமிழகம். தினசரி 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு நேரங்களில் தனியார், பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு அனுமதி இல்லை.
தினமும் இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், தேவை இல்லாமல் யாராவது வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 4 மணி வரை
இந்த நிலையில் இன்று இரவு 10 மணியில் இருந்து 4வது நாளாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கின் போது இரவு 10 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடை உள்ளது. இதனுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக 24 மணி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

வெளியே வர வேண்டாம்
இதன் மூலம் பொதுமக்கள் இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் 30 மணி நேரத்திற்கு மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

முழு அடைப்பு
மளிகைக்கடைகள், இறைச்சிக்கடைகள் மீன் அங்காடிகள், உள்ளிட்ட அனைத்துக்கடைகளும் அடைக்கப்படுகிறது. மருந்துக்கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

86 மின்சார ரயில்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தம் 86 ரயில்கள் இயக்கப்படும். அவை 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவைகள் அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், முன்கள பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை
முழு ஊரடங்கு நாளான நாளை மறுநாள் ஞாயிறு அன்று சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கம் பற்றி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்றும், காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பறிமுதல்
தடையை மீறி இரவு நேர ஊரடங்கின்போது வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஞாயிறன்று முழு ஊரடங்கின்போதும், ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடர்ச்சியாக ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர் இதற்காக ஷிப்டு முறையில் காவல்துறையினருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications