Tamil nadu lok sabha results 2024: அதிமுக, பாஜக அவுட்! 40 தொகுதிகளையும் சொல்லி அடித்த திமுக கூட்டணி!
சென்னை: லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாtடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. விருதுநகரில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், தருமபுரியில் பாமகவின் சௌமியா அன்புமணி ஆகியோரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக 39 இடங்களிலும் வென்று கிளீன் ஸ்வீப் செய்துள்ளது திமுக. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்பட்டன. ஏழு கட்ட லோக்சபா தேர்தலும் முடிந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை: அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளையும் சேர்த்து 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆவர்.
இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு அனைத்து (39) மையங்களிலும் தொடங்குகிறது. அதற்கு முன்பதாக அங்குள்ள ஸ்டிராங்க் ரூமில் இருந்து இவிஎம் மெஷின்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்படும். வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் அவை எடுத்து வரப்பட்டு 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் உள்ள 234 அறைகளில் வைத்து நடைபெற்று வருகிறது.
4 முனை போட்டி: லோக்சபா தேர்தலில் பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியதால் அதன் முடிவுகளைக் காணவும், மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை அறியவும் மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் என 4 முனை போட்டி( நாம் தமிழர் உள்பட) நிலவியது.
திமுக, அதிமுக, பாஜக: தமிழகத்தில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் கூறின. இரண்டாவது இடத்தில் அதிமுகவா அல்லது பாஜகவா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற்றுவிடுவோம் என நம்பிக்கையுடன் கூறி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக திமுக வெல்லுமா? அதிமுக, பாஜக எத்தனை இடங்கள் பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.
14 மேஜைகள்: எனவே வாக்கு எண்ணிக்கை மிகுந்த பரபரப்புக்கு இடையே இன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட இருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை அறையிலும் 14 மேஜைகள் வீதம் போடப்பட்டு இருக்கும். பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில், தேவைப்படும் இடங்களில் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று கூடுதல் மேஜைகள் வைக்கப்படும்.
தமிழகத்தில் பாஜக எந்தெந்த லோக்சபா தேர்தல்களில் வென்றுள்ளது தெரியுமா?
பலத்த பாதுகாப்பு: காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது. 8.30 மணி முதல் இவிஎம் இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவிஎம் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வந்தது. தபால் வாக்குகள் தொடங்கி திமுக பெரும்பாலான இடங்களில் தொடர்ச்சியாக முன்னிலை பெற்று வந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக கூட்டணி 1 இடத்தில் முன்னிலை வகித்து வந்த நிலையில் அதுவும் திமுக வசமானது. ருமபுரி தொகுதியில் பாமகவின் சௌமியா அன்புமணி கடும் போட்டி கொடுத்து தோற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,061 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.












Click it and Unblock the Notifications