தமிழகத்தில் விரைவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது.
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும், பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா வேக்சின் முகாம் நடைபெற்றது. இதை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

வேக்சின் பணிகள்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சனிக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக 150 கோடி வேக்சின்கள் போடப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மொத்தமாக 9 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

சிறார்கள்
அதேபோல சிறார்களுக்கான வேக்சின் முகாம் பள்ளிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களில் மொத்தம் 34 லட்சம் பேருக்கு வேக்சின் போட வேண்டும். அதில் ஏற்கனவே 22 லட்சம் குழந்தைகளுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுவதும் 1.5 கோடி சிறார்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அவர்களில் 22 லட்சம் பேர், அதாவது 7இல் ஒரு சிறார் தமிழ்நாடு சேர்ந்தவர் ஆகும்.

12 மாவட்டங்கள்
இது தவிரத் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சுமார் 87.03% பேருக்குக் குறைந்தபட்சம் முதல் டோஸும், 60.1% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், அரியலூர், திருப்பூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், மற்றும் கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மாநில சராசரியைக் காட்டிலும் அதிகமாக 90% பேருக்கு வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது.

35 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
இன்று தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது. வரும் 10ஆம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் செயல்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை தினசரி 2 ஆயிரம் என்ற விகிதத்தில் கூடுதலாகப் பதிவாகி வருகிறது. அதேநேரம் மாநிலத்தின் 35 மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லை என்பது நல்ல செய்தி. பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் கொரோனாவில் இருந்து தப்ப ஒரே வழி.

பூஸ்டர் டோஸ் பணிகள்
அதேபோல தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்பட்டும். தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்த இனை நோயாளிகள் என மொத்தம் 35 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். மத்திய அரசு விதிகளின்படி (9 மாத இடைவெளி) இவர்களில் 4 லட்சம் பேர் தற்போது பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளத் தகுதியானவர்கள். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதமே 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டவர்கள் ஆவர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையிலும் மருத்துவமனைகளில் தேவையான கொரோனா படுக்கைகள் காலியாக உள்ளன. லேசான பாதிப்பு உடையவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இனை நோய் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிறார்கள். மேலும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து நாளை (ஜன. 10) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் உள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications